டாக்கா: பங்ளாதேஷில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது.
அடுத்த சில நாள்களுக்கு அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குபடி அந்நாட்டு வானிலை நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
ஏப்ரல் 19ஆம் தேதியன்று பங்ளாதேஷ் வானிலை நிலையம் வெப்ப அலை குறித்து மூன்று நாள் எச்சரிக்கை விடுத்தது. அதன் பின்னர் ஏப்ரல் 22ஆம் தேதி மேலும் மூன்று நாள்களுக்கு வெப்ப அலை தீவிரமாக இருக்கும் என்று மீண்டும் எச்சரிக்கை விடுத்தது.
நாட்டின் பல இடங்களில் வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வருகிறது. குறிப்பாக வடக்குப் பகுதிகளில் வெயில் கடுமையாக உள்ளது.
தலைநகர் டாக்காவிலும் நிலைமை மோசமாக உள்ளது. அங்கு சனிக்கிழமையன்று அதிகபட்சமாக 40.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. ஆக அதிகமாக ஞாயிற்றுக்கிழமை சுவாடாங்கா பகுதியில் 42.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
கடுமையான வெப்பம் காரணமாக இதுவரை நான்கு பேர் பங்ளாதேஷில் உயிரிழந்துள்ளனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு ஏப்ரல் 27ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் வீட்டில் இருந்து இணையம் வழி கற்கும் படி அறிவிக்கப்பட்டுள்ளது.