வாஷிங்டன்: சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திலிருந்து டிக்டாக் தளம் பிரிக்கப்படுவதற்கான மசோதாவுக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
அந்த மசோதாவின்படி அவ்வாறு செய்யாவிட்டால் அமெரிக்காவில் டிக்டாக்கிற்குத் தடை விதிக்கப்படும்.
உக்ரேன், இஸ்ரேல், தைவான் ஆகியவற்றுக்கு ராணுவ உதவி அளிக்க வகைசெய்யும் 95 பில்லியன் டாலர் (129 பில்லியன் வெள்ளி) மதிப்பிலான வெளிநாட்டு உதவித் திட்டத்துக்கு செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 23) அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அத்திட்டத்தில் டிக்டாக் தடை தொடர்பான மசோதாவும் அடங்கும்.
அந்த வெளிநாட்டு உதவித் திட்டத்துக்கான ஆவணங்களில் இனி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திடுவதுதான் மிச்சம்.
டிக்டாக், இளையர்களிடையே பிரபலமாக இருப்பது குறித்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். பெய்ஜிங் தரவுகளைச் சேகரித்து பயனர்களை வேவுபார்க்க டிக்டாக் வகைசெய்வதாக அவர்கள் கூறி வருகின்றனர்.
அமெரிக்காவில் மட்டும் 170 மில்லியன் பேர் டிக்டாக்கைப் பயன்படுத்துகின்றனர்.
டிக்டாக் பெய்ஜிங்கிற்கு அடிபணிவதாகவும் அது சீன அரசாங்கத்தின் பிரசாரத் தளமாக விளங்குவதாகவும் குறை கூறப்படுகிறது.
ஒரு நிறுவனம் அமெரிக்காவில் இயங்குவதற்கு எதிராகத் தடை விதிப்பது அதிகம் நடக்காத ஒன்று. டிக்டாக் தடை மசோதாவுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அப்படி ஓர் அரிய நிகழ்வு இடம்பெறக்கூடும் வாய்ப்புகள் தலைதூக்கியுள்ளன.
மசோதாவைச் செயல்படுத்துவதற்கு சாதகமாக 79 பேர் வாக்களித்தனர். 18 பேர் அதற்கு எதிராக வாக்களித்தனர்.
மசோதாவைச் செயல்படுத்தத் தாம் கையெழுத்திடப்போவதாக திரு பைடன் குறிப்பிட்டிருந்தார்.
ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் திரு பைடன், சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் தொலைபேசிவழி பேசினார். அந்த உரையாடலில் டிக்டாக் தொடர்பாகத் தமக்கிருக்கும் அக்கறைகளை திரு பைடன் வலியுறுத்தினார்.