பெய்ஜிங்: தென்சீனாவின் குவாங்டோங் மாநிலத்தில் உள்ள விரைவுச்சாலையின் ஒரு பகுதி சரிந்தது.
இதில் குறைந்தது 24 மரணமடைந்துள்ளதாக அம்மாநில ஊடகத் தகவல்கள் மே 1ஆம் தேதி தெரிவித்தன.
மெய்சு நகர், டாபு கவுண்டிக்கு இடையிலான சாலை அதிகாலை 2.10 மணிக்கு சரிந்ததாக சிசிடிவி எனப்படும் மாநில ஊடகம் தகவல் வெளியிட்டது. இதில் 18 வாகனங்கள் சிக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இது பற்றிக் கூறும் சிசிடிவி ஊடகத் தகவல், “காலை 11.45 மணிக்கு 19 பேர் மரணம் அடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 30 பேருக்கு மருத்துவமனை ஒன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” என்று விளக்கமளித்தது. இதில் மருத்துவமனை சிகிச்சை பெறுவோரின் உயிருக்கு இப்போதைக்கு ஆபத்தில்லை என்று கூறியது. ஆனால், அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து சிசிடிவி ஊடகம் விவரம் வெளியிடவில்லை.
விபத்து குறித்து சமூக ஊடகங்களில் வெளியான படங்கள், வாகனங்கள் வீழ்ந்த ஆழமான பாதாளப் பகுதியிலிருந்து கிளம்பிய தீ, புகையைக் காட்டின.
இதன் தொடர்பில் வெளியான மற்ற படங்கள், தூரத்தில் அவசர வாகனங்கள் வருவதை காணச் சிலர் கூடியதைக் காட்டுவதாக இருந்தது.
விபத்து காரணமாக பொதுப் பாதுகாப்பு, அவசரநிலையை கையாளுதல், தீயணைப்புப் பிரிவு, சுரங்கப் பாதையில் சிக்கியிருப்போரை மீட்கும் பிரிவு என கிட்டத்தட்ட 500 பேர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிசிடிவி ஊடகம் தெரிவித்தது.