சிங்கப்பூர் அரசு நீதிமன்றங்கள் நாட்டில் வகிக்கும் பங்கு குறித்துப் புரிந்துகொள்ள 32 உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 125 மாணவர்கள் ‘நீதிமன்றத்தில் ஒரு நாள்’ என்னும் நடவடிக்கையில் கலந்துகொண்டனர்.
ஆண்டுதோறும் இடம்பெறும் இந்நடவடிக்கை, அரசு நீதிமன்றங்களின் செயற்பாடுகள், அவை மேற்கொள்ளும் பணிகள், அவற்றின் பங்கு ஆகியவற்றை மாணவர்கள் அறிந்துகொள்ள நோக்கம் கொண்டுள்ளது.
மாறிவரும் சூழல்களுக்கு ஏற்றவாறு புதிய தகவல்களுடன் இளையர்களுக்கு நல்ல கற்றல் அனுபவத்தை வழங்கியது இவ்வாண்டு நடவடிக்கை.
மின்னிலக்கமயமாகும் உலகில் இணையத் துன்புறுத்தல் சம்பவங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனை மையக்கருத்தாககக் கொண்டு, இணையத் துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்த விவரங்களும் சமாளிக்கும் உத்திகளும் மாணவர்களுக்குப் போதிக்கப்பட்டது.
லோயாங் வியூ உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 14 வயது கண்ணன் இனியா, “எங்கள் பள்ளியிலிருந்து மாணவத் தலைவர்கள் ஆறு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் ஒருவராக இதில் கலந்துகொண்டது பெருமையாக இருந்தது. சிங்கப்பூர் நீதித்துறை குறித்துப் பல தகவல்கள் பகிரப்பட்டன. வெவ்வேறு பள்ளி மாணவர்களுடன் இணைந்து பங்கேற்றது புது அனுபவமாக இருந்தது,” என்று பகிர்ந்துகொண்டார்.
“சிங்கப்பூர் நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் உதவியையும் ஆதரவையும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதன் மூலம் உணர்ந்தேன். மாணவத் தலைவர் பொறுப்பில் இருக்கும் எனக்கு பள்ளியில் துன்புறுத்தல் சம்பவங்களை எதிர்நோக்குபவர்களுக்கு உதவ இங்கு பெற்ற அறிவு கைகொடுக்கும்,” என்றும் குறிப்பிட்டார் இனியா.
“புக்கிட் வியூ உயர்நிலைப்பள்ளி சக மாணவர் ஆதரவுத் திட்டதின் தலைவர்களில் ஒருவராகப் பங்கு வகிக்கிறேன். இந்நிகழ்வின் மூலம் புதிய நண்பர்கள் பெற்றேன். என் பள்ளிப் பொறுப்பிற்கு உதவும் வகையில் கருத்துக்கள் இருந்தன. சக பள்ளி மாணவர்கள் யாரேனும் இணையத் துன்புறுத்தலை எதிர்கொண்டால் அவர்களுக்கு ஆதரவளிக்க நான் தயாராக இருப்பேன்,” என கூறினார் உயர்நிலை மூன்றில் பயிலும் அருள் ஸ்ரீ விக்னேஸ்வரி.
வழக்கறிஞராக ஆர்வம் கொண்டுள்ள பாபு பிரணவ், “நீதித்துறை குறித்த பல புது தகவல்களை அறிந்துகொள்ளும் நோக்கில் இந்நடவடிக்கையில் கலந்துகொண்டேன். குற்றம் செய்தவர்கள் தப்பிக்காமல் இருப்பதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத் தருவதிலும் அரசு நீதிமன்றங்கள் ஆற்றும் பங்கை தெரிந்துகொண்டேன். அத்துடன், நீதிமன்றத்தில் வெவ்வேறு பொறுப்புகளில் இருப்போர் ஆற்றும் பணிகள் குறித்தும் விளக்கம் பெற்றேன். வழக்கறிஞராக வேண்டும் என்ற என்னுடைய வேட்கை மேலும் கூடியுள்ளது,” என்றார்.
கொவிட்-19 தொற்றுப்பரவல் ஏற்படுத்திய ஈராண்டு இடைவேளைக்குப் பிறகு ஜூலை 4ஆம் தேதி நேரடியாக ‘நீதிமன்றத்தில் ஒரு நாள்’ நிகழ்வு இடம்பெற்றது.
“சிறப்புக் கவனத்துடன் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்திருந்தோம். நீதிபதிகளுடனும் வழக்கறிஞர்களுடனும் உரையாட இது நல்ல வாய்ப்பு வழங்கி இருக்கும் என்று நம்புகிறேன்,” என்று அரசு நீதிமன்ற நீதிபதி வின்சென்ட் ஹுங் சொன்னார்.
2014 ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வரும் ‘நீதிமன்றத்தில் ஒரு நாள்’ நடவடிக்கை, தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களுக்குப் பயனுள்ளதாக அமைந்து வருகிறது.