சைக்கிளிலேயே தனி ஒருவராக சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு தாய்லாந்தின் நராத்திவாட் மாகாணத்திற்குச் சென்று சைக்கிளிலேயே இங்கு திரும்பினார் கணேசன் சோமா, 33. அரியவகை நோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது, ‘இக்கானமிஸ்ட்’ பத்திரிகையின் பணித்திட்ட மேலாளரான அவரது இந்தப் பயணத்தின் நோக்கம். அவர் சைக்கிளில் மொத்தம் 1,988 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளார். ஜூன் 5ஆம் தேதி முதல் ஜூன் 24ஆம் தேதி வரை அவரது பயணம் நீடித்தது.
“18 நாள் சைக்கிள் பயணம் செய்து இடையில் இரண்டு நாள் இளைப்பாறியிருந்தேன். என் பயணப் பாதை கிட்டத்தட்ட நீள்வட்டமாக நீண்டு வளைந்த ஒன்று எனலாம்,” என்றார் திரு கணேசன்.
சிங்கப்பூரிலிருந்து மேற்கு பாதை வழியாகச் சென்று கெடா மாநிலத்தை அடைந்த பின் தாய்லாந்தின் ஹாட் ஜாய், பட்டானி மாகாணங்களைக் கடந்து நராத்திவாட் மாகாணத்தை அடைந்தார். பின் நராத்திவாட்டிலிருந்து மலேசியாவின் கோத்தா பாருவிற்கு கப்பல் வழியாகச் சென்று கோத்தா பாருவை அடைந்தார். அங்கிருந்து அவர், மலேசியாவின் கிழக்குப் பக்கத்தில் திரங்கானு, குவாந்தான், மெர்சிங், கோத்தா திங்கி ஆகிய இடங்களைக் கடந்து இறுதியில் மீண்டும் சிங்கப்பூரை அடைந்தார்.
நீண்ட தூரத்திற்குச் சைக்கிளில் செல்வதற்கு உடல்ரீதியான, மனரீதியான மற்றும் தளவாட ரீதியான முன்னேற்பாட்டு அவசியத்தை திரு கணேசன் விளக்கினார்.
இந்த நெடிய பயணத்திற்கு முன் மூன்று மாதம் பயிற்சி மேற்கொண்டார் திரு கணேசன்.
“அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து 60, 70 கிலோமீட்டர் சைக்கிளை ஓட்டி காலை சுமார் எட்டு ஒன்பது, மணி வீடு திரும்பி வேலைக்குச் செல்லத் தயாராவேன். மாலையில் நேரம் இருந்தால் மீண்டும் சைக்கிளில் செல்வேன் அல்லது வேறு உடற்பயிற்சிகளைச் செய்வேன். இடையில் உடற்பயிற்சிக் கூடத்திற்கும் சென்று உடலுறுதியை வளர்த்துக்கொள்வேன்,” என்றார்.
உடலுக்குரிய பயிற்சிகளைத் தவறாமல் செய்து திரு கணேசன் உடலின் உரம் சகிப்புத்தன்மையை கூடுவதுடன் மன வலிமையும் கூட்டிக்கொண்டார். “ சில நேரங்கில் சாய்வான பாதையின் மேல் சைக்கிளை ஓட்டுவேன். இது என் தைரியத்தை வளர்க்கப் பயன்படும்,” என்றார்.
சிறிய உடல்வாகு இருக்கும் திரு கணேசன் சைக்கிள் ஓட்டுவதால் எடை குறைவதால் அதையும் சரியான நீராகார முறையைக் கடைப்பிடித்து சமாளிக்க வேண்டியிருந்தது. சைக்கிள் பயணத்தின்போது மடிக்கணினி, கோப்ரோ கருவிகள், 1.5 லீட்டர் தண்ணீர் போத்தலையும் கொண்ட பையுடன் அவர் சைக்கிள் செய்தார்.
உத்திப்பூர்வமாகச் செயல்பட வேண்டி இருந்ததாகக் கூறிய திரு கணேசன், பயணத்தின் ஒவ்வொரு நாளும் சராசரியாக 80 கிலோமீட்டர் முதல் 100 கிலோமீட்டர் வரை சைக்கிள் ஓட்டியதாகக் கூறினார்.
“நராத்திவாவிலிருந்து கோத்தா பாருக்கு இடையே ஓட்டிச் சென்ற தூரம் பயணத்தில் ஆகக் குறைவாக ஏறத்தாழ 70 கிலோமீட்டர் உள்ளது. பயணத்தின் ஆக நீளமாக தூரமாக மெர்சிங் முதல் சிங்கப்பூர் வரை 150 தூரம் ஓட்டினேன்,” என்று கூறினார். மெர்சிங்கிற்கும் கோத்தா திங்கிற்கும் இடையேயான பாதை, மேலும் கீழுமாகச் செல்லும் மலைப்பாதை கடினமாக இருந்ததைக் குறிப்பிட்டார்.
கொளுத்தும் வெய்யிலைத் தவிர்க்க ஒவ்வொரு நாளும் காலை 7 ஏழு மணிக்குப் பயணத்தைத் தொடங்குவதாகத் திரு கணேசன் கூறினார். வழக்கத்தைவிட அதிகம் சாப்பிட வேண்டி இருந்ததாகக் கூறிய அவர், பயணம் தொடங்கி முதல் இரண்டு மணி நேரத்திற்குள் முதல் காலை உணவையும் சில மணி நேரத்திற்குப் பிறகு இரண்டாவது காலை உணவையும் சாப்பிட்டார். “சாக்லெட், புளூபெரி, மைலோ ரொட்டிகளைச் சாப்பிடுவேன். ஒரு சில வகை ரொட்டிகள் சிங்கப்பூரில் கிடைக்காது,” என்று சிரிப்புடன் கூறினார்.
வெய்யில் மட்டுமின்றி மழையையும் தாங்கிக் கொண்ட திரு கணேசனுக்கு வழியில் குரங்குகள் சிறிதளவு தொல்லை தந்தபோதும் அதனைச் சமாளித்தார். இத்தகைய நீண்ட பயணத்திற்கு மன உறுதி முக்கியம் என்றாலும் நாட்டுப்புற, நகர்ப்புற காட்சிகளைக் திரு கணேசன் கண்டு மகிழ்ந்தார் . திட்டமிடுதல் முக்கியம் என்றாலும் மாற்றங்கள் ஏற்படுவது இயல்புதான் என்று கூறினார்.
பயணத்தில் பினாங்கிலும் கெடாவிலும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்களைச் சந்தித்து அவர்களது அனுபவத்தைக் கேட்டுக்கொண்டார்.
இதுபோல பல முறை தூரமாக சைக்கிளை இவர் ஓட்டிப் பழகியபோதும், மற்றொரு நாட்டைக் கடந்து ஓட்டும் அளவிற்கு உடல்வலிமை தமக்கு இல்லை எனத் தொடக்கத்தில் எண்ணியிருந்தார். ஆனாலும் பயிற்சியும் அனுபவமும் அதிகரிக்க திரு கணேசனின் நம்பிக்கையும் துணிச்சலும் வளர்ந்தன.
வழிகாட்டுதலால் மேம்பாடு
கடந்த ஆண்டின் முற்பகுதியில் ‘பாலிகான் பெண்ட் ஆர்5’ என்ற சைக்கிளைப் பயன்படுத்தினார். அதன் பின், மலேசியாவில் சைக்கிளில் இதுவரை செல்லாத சிங்கப்பூரர்களை அறிமுகப்படுத்தும் ‘சைக்கிளிங் எஸ்ஜி டு மலேசியா’ ஃபேஸ்புக் குழுவில் சேர்ந்து உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியைக் திரு கணேசனும் ஃபேஸ்புக் சைக்கிள் குழுவில் சிலரும் சைக்கிளில் சுமார் 150 கிலோமீட்டர் தூரம் ஜோகூர் மாநிலத்தின் பத்து பகாட் மாவட்டத்திற்குச் சென்றனர். அங்கு ஒரு நாள் தங்கி மீண்டு சிங்கப்பூருக்குச் சைக்கிளில் திரும்பினார். முதன்முறையாக 100 கிலோமீட்டருக்கு மேல் சைக்கிளில் பயணம் மேற்கொண்டது இவருக்கு மேலும் நம்பிக்கையைத் தந்தது.
“அதன் பின்புதான் கனவு கண்டது போதும், இனி செயலில் இறங்குவோம் என எண்ணி லங்காவி சைக்கிள் பயணத்தை மேற்கொண்டேன்,” என்று எண்ணினார்.
விழிப்புணர்வு தேவை
சில ஆண்டுகளுக்கு முன்னதாக ‘மேக் அ விஷ்’ அறக்கட்டளையின்மூலம் அரிய வகை நோய் உள்ள ஒரு பிள்ளையைச் சந்தித்த பிற்கு, அதனைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் திரு கணேசனுக்கு ஏற்படுத்தது. இந்தச் சைக்கிள் பயணத்தின் மூலம் அரிய வகை நோய் உள்ள சிறார்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முனைந்த திரு கணேசன், இதுகுறித்து தொடர்பில் மலேசிய அரிவகை நோய்கள் சங்கத்தைத் தொடர்புகொண்டு அங்குள்ள சில குடும்பங்களின் அறிமுகத்தைப் பெற்றார். “இத்தகையோருக்குத் தேவை அனுதாபமல்ல, ஆதரவே,” என்றார்.