முரசொலி
உக்ரேன், கிழக்கு ஐரோப்பிய சுதந்திர நாடு. ஐரோப்பாவில் நிலப்பரப்பில் ரஷ்யாவுக்குப் பிறகு அதுதான் ஆகப்பெரிய நாடு. அதன் கிழக்கு, வடகிழக்கில் ரஷ்யா அமைந்து இருக்கிறது.
சோவியத் யூனியனின் உறுப்பு நாடாக 1922ஆம் ஆண்டு முதல் இருந்து வந்த உக்ரேன், 1991ஆம் ஆண்டில் அந்த யூனியன் சிதைந்ததை அடுத்து தனிநாடாக விடுதலை அடைந்தது.
சோவியத் யூனியனில் இருந்து உக்ரேன் உட்பட 14 நாடுகள் பிரிந்தன. இந்த நிலவரம் ரஷ்யாவுக்குக் கவலை தரும் ஒன்றாகவே இருந்து வருகிறது. குறிப்பாக உக்ரேன் தனக்கு எதிராக நேட்டோ அமைப்பில் சேர்ந்துகொண்டுவிடும் என்று ரஷ்யா தொடர்ந்து அஞ்சி வருகிறது.
நேட்டோ என்பது ஐரோப்பா-வடஅமெரிக்கா வைச் சேர்ந்த 30 நாடுகளை உள்ளடக்கிய ஒரு பாதுகாப்பு அமைப்பாகும். நேட்டோவில் உக்ரேன் சேர்ந்துவிட்டால் மேற்கின் ராணுவ பலமும் வளங்களும் தன் எல்லையைத் தொட்டுவிடும், தனக்கு ஆபத்து வந்துவிடும் என்று ரஷ்யா கணிக்கிறது.
ஆகையால் நேட்டோ நாடான அமெரிக்கா வுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் உக்ரேனே முக்கியமான பிரச்சினையாக இருந்து வருகிறது.தன் பாதுகாப்பைக் காரணம் காட்டி உக்ரேனின் கிரீமியா தீபகற்பத்தை ரஷ்யா முன்பு தன்னுடன் இணைத்துக்கொண்டது நினைவிருக்கலாம்.
இப்படியே காலம் ஓடிவந்த நிலையில், இதுவரை காணாத கொரோனா பிடியில் வசமாக சிக்கி அதில் இருந்து மீண்டுவர முடியாமல் உலகம் தத்தளித்துக்கொண்டு இருந்த ஒரு நேரத்தில், அதாவது 2022 பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்ய அதிபர் உக்ரேன் மீது முழு போரைத் தொடுத்து பெரும் படைபலத்தை அந்த நாட்டின் உள்ளே அனுப்பினார்.
ரஷ்யாவின் செய்கை எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும் அந்த ஆக்கிரமிப்பு இடம்பெற்ற காலகட்டம் காரணமாக அது உலகை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி பொருளியலை இன்னும் மோசமாக்கிவிட்டது.
கோதுமை, எண்ணெய் உற்பத்தி ஏற்றுமதியில் உக்ரேன், ரஷ்யா இரண்டும் உலக அளவில் முக்கியமானவை என்பதால், கிருமி காரணமாக அறுபட்டிருந்த பொருள், சேவை விநியோகக் கட்டமைப்பு, போர் காரணமாக மேலும் பாதிக்கப்பட்டது. இன்னமும் அது பழைய நிலைக்குத் திரும்பியபாடில்லை.
உக்ரேன் போரில் உக்ரேனும் நேட்டோவும் ஒரு பக்கமும் ரஷ்யா ஒரு பக்கமும் நிற்கின்றன.
அந்தப் போர் ரஷ்யா மட்டுமன்றி உலகம் எதிர்பார்த்தபடி இல்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது. வல்லரசான ரஷ்யாவை எதிர்த்து மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரேன் இன்னமும் தாக்குப்பிடித்து நிற்பது, உலகில் உள்ள சிங்கப்பூர் உள்ளிட்ட இதர சிறு நாடுகளுக்குப் புதிய வகை நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. தைவானும் இதற்கு விதிவிலக்கல்ல.
உக்ரேன் போரின் ஓராண்டைக் குறிக்கும் வகையில் அந்த நாட்டிற்குத் திடீர் வருகை அளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரேனுக்கு மேலும் ராணுவ உதவிகளும் இதர உதவிகளும் வழங்கப்படும் என்று அறிவித்ததோடு, ரஷ்யாவுக்கு எதிரான மேலும் தடைகள் அமலாகும் என்றும் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபரின் உக்ரேன் வருகைக்கு அடுத்த நாளன்று ஓர் அறிவிப்பை விடுத்த ரஷ்ய அதிபர் புட்டின், நீண்ட நெடுங்காலப் போருக்குத் தன் நாடு தயார் என்று சவால் விடுத்தார்.
அதோடு, மட்டுமன்றி ‘நியூ ஸ்டார்ட்’ என்ற அணு ஆயுதக் கட்டுப்பாட்டு உடன்பாட்டில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக விலகத் தயார் என்பதைக் கோடிகாட்டும் வகையில் புட்டின் தடாலடியாக ஓர் அறிவிப்பும் விடுத்தார்.
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணாக எஞ்சி இருக்கும் ஒரே ஓர் அணு ஆயுதக் கட்டுப்பாட்டு உடன்பாடு இதுதான். ரஷ்ய அதிபரின் இந்த அறிவிப்பு காரணமாக அணு ஆயுதப் போட்டாபோட்டி ஏற்படக்கூடிய வாய்ப்பும் தலைதூக்கி இருக்கிறது.
இந்த விவகாரத்தில் இதுவரை ரஷ்யாவை நேரடியாக குறை சொல்லாத சீனா, போர் ஓராண்டைக் கடந்துவிட்டதை அடுத்து, உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஒரு யோசனையை முன்வைத்து உள்ளது.
அந்த யோசனை தொடர்பில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கைச் சந்தித்து பேசத் தயார் என்று உக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கியும் தெரிவித்துள்ளார்.
உக்ரேனில் நடந்து வரும் போரின் முதல் ஆண்டைப் பார்க்கும்போது, அந்தப் போர் எல்லா தரப்புக்குமே பேரழிவாகத்தான் இருந்து வந்திருக்கிறது. கூடிய விரைவில் வெற்றி பெற்றுவிடலாம் என்று கணக்குப் போட்டு அதில் தோற்றுவிட்ட ரஷ்ய அதிபர், உக்ரேனுக்கு இந்த அளவுக்கு மேற்கத்திய நாடுகளின் ஆதரவு இருக்கும் என்று எதிர்பார்த்திருக்கமாட்டார்.
உக்ரேன் போர், உக்ரேன் நாட்டுக்கு உள்ளே நடக்கிறது. ஆகையால் அந்த நாடு பெருத்த உயிருடற்சேதத்தை எதிர்நோக்கி வருகிறது. அடிப்படை கட்டமைப்புகள் சீர்குலைந்துவிட்டன, தொடர்ந்து சீர்குலைந்து வருகின்றன.
ரஷ்யாவுக்கும் பெருத்த உயிருடற்சேதத்தை உக்ரேன் உருவாக்கி இருக்கிறது, உருவாக்கி வருகிறது. உக்ரேன் போர் நீடித்தால் அதன் விளைவாக ரஷ்யாவும் நேட்டோவும் நேரடியாக மோதக்கூடிய நிலை ஏற்பட்டுவிடலாம்.
இப்போதைய உலகில் வல்லரசுகளுக்கு இடையில் பகிரங்க போர் மூண்டால் அணு ஆயுதங்கள் மூலம் எந்த அளவுக்குப் பேரழிவுகள் ஏற்படும் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை.
எந்த ஒரு போரும் ஒரு வெற்றியில் போய் முடியும். அல்லது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும். உக்ரேன் போரின் ஓராண்டு நிலவரத்தைப் பார்க்கையில் ராணுவ படை பலம் மூலம் யாருக்கும் வெற்றி கிட்டும் என்று தெரியவில்லை.
ஆகையால், பேச்சுவார்த்தை ஒன்றுதான் வழி என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
இதை மனதில் கொண்டு ரஷ்யா, உக்ரேன், மேற்கத்திய நாடுகள், சீனா உள்ளிட்ட அனைத்து தரப்புகளும் செயல்பட வேண்டும். உக்ரேனில் அமைதி நிலவ வழிகாண வேண்டும். இப்போதைய உலகில் உக்ரேனின் அமைதி, காலத்தின் கட்டா யம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.