சிங்கப்பூரில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 2023 வரவுசெலவுத் திட்டம், வழக்கம்போல் பொருளியலை உசுப்பிவிடுவதையும் பொருளியல் வளர்ச்சிக்கு ஆதரவாக தன் மக்களுக்கு வளத்தைத் திருப்பிக்கொடுப்பதையும் இரண்டு கண்களாகக் கருதி அவற்றில் ஒருமித்த கவனத்தைச் செலுத்தி இருக்கிறது.
வளர்ச்சி இருந்தால்தான் மகிழ்ச்சி, செழிப்பு, வளம், வாய்ப்புகள், முன்னேற்றம் என்பதால் ஆண்டுக்கு ஆண்டு பொருளியல் வளர்ச்சியைச் சாதிக்கத் தோதாக நீண்ட நெடுங்காலமாகவே வரவுசெலவுத் திட்டத்தில் கணிசமான அளவுக்குத் திட்டங்கள் இடம்பெற்று வந்துள்ளன.
புதிய வரவுசெலவுத் திட்டத்தில், நெடும் பட்டியல்போடும் அளவுக்குப் பொருளியல் திட்டங்களில் பலவும் மேம்படுத்தப்பட்டு உள்ளன.
தேசிய உற்பத்தித்திறன் நிதிக்கு $4 பில்லியன் ஊக்குவிப்பு; ஐந்து வகையான புத்தாக்கத் துறைகளில் நிறுவனங்கள் ஈடுபட ஊக்குவிக்கும் வகையில் புதிதாக அறிவிக்கப்பட்டு உள்ள நிறுவன புத்தாக்கத் திட்டம்; உள்ளூர் நிறுவனங்கள் விரிவடைய உதவும் சிறிய, நடுத்தர நிறுவன இணை முதலீட்டு நிதித் திட்ட மேம்பாடு; நிறுவனங்கள் கடன்பெற உதவும் நிறுவன நிதித் திட்டம் நீட்டிப்பு ஆகியவற்றை எடுத்துக்காட்டாகச் சொல்லாம்.
இவற்றோடு, பொருளியல் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அதிகமாக்கும் இதர பல திட்டங்களும் புதிய வரவுசெலவுத் திட்டத்தில் இருக்கின்றன.
துவாஸ், சாங்கி விமான நிலைய முனையம் 5, எம்ஆர்டி விரிவாக்கம் போன்ற பிரம்மாண்ட அடிப்படை வசதித் திட்டங்கள் ஒரு பக்கம், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சிங்கப்பூரின் இணைப்பு வசதிகளைப் பலப்படுத்தும் வகையில் 27 தாராள வர்த்தக உடன்பாடுகளை உள்ளடக்கிய கட்டமைப்பு மறுபக்கம் என்று இதர பலவும் இவற்றில் உள்ளடங்கும்.
இருந்தாலும்கூட, நாடாளுமன்றத்தில் புதிய வரவுசெலவுத் திட்டம் தாக்கலான பிறகு தொழில்துறையில் சில வட்டாரங்களில் ஒரு கவலை தலைதூக்கி இருப்பதாகத் தெரியவருகிறது.
அதாவது, அரசாங்கத்தின் ஒருமித்த கவனம் பொருளியல் வளர்ச்சியில் இருந்து, வளத்தை மக்களுக்குப் பிரித்துக் கொடுப்பதில் அதிகம் திரும்பி இருக்கிறதோ என்று அந்தத் துறையினர் சிலர் கவலைப்படுகிறார்கள். சமூகக் கொள்கைகளில் அதிகம் கவனம் செலுத்திப்படுகிறது, பொருளியல் வளர்ச்சிக்குப் போதிய அளவுக்குத் திட்டங்கள் இல்லை என்று விமர்சகர்களும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
ஆனால் அனைத்தையும் சீர்தூக்கிப் பார்க்கையில் அப்படிப்பட்ட ஒரு கவலை அநாவசியமான ஒன்று என்றுதான் தெரிகிறது. கொவிட்-19 தலைவிரித்து ஆடியபோது மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் உதவ வேண்டிய அவசர அவசியம் ஏற்பட்டதை உணர்ந்து அரசாங்கம் ஏராளமான உதவிகளை, ஆதரவுகளைப் பலமுறை துணை வரவுசெலவுத் திட்டங்கள் மூலமாகவும் செய்தது.
அந்த உதவிகளில் சில இன்னமும் ஓரளவுக்குத் தொடர்கின்றன. கொரோனா காலத்தின்போது உலகப் பொருளியலும் உள்ளூர் பொருளியலும் முடங்கி, பல துறைகள், நிறுவனங்கள் மூடப்பட்டு, எதிர்காலம் கேள்விக்குறியாகி, மக்கள் வேலை இழந்து, வெளியேகூட சென்றுவர இயலாத நிலை ஏற்பட்டபோது முதலில் மக்கள் மீது அதிக அவசர கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.
ஆனால் இப்போது காலம் மாறி இருக்கிறது. கட்டுப்பாடுகள் அகன்று பொருளியல் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது.
இதனால் வரவுசெலவுத் திட்டத்தின் ஒருமித்த கவனம் இப்போது பொருளியல் வளர்ச்சி, செல்வத்தைப் பகிர்ந்துகொடுப்பது ஆகிய இரண்டிலும் ஒரு சேரத் திரும்பி இருக்கிறது.
பொதுவாகவே பொருளியலும் சமூகக் கொள்கைகளும் சேர்ந்துதான் செயல்படும். இரண்டையும் பிரித்துப் பார்ப்பதைவிட சேர்த்துப் பார்ப்பதுதான் சரியானதாக இருக்கும்.
அதாவது, இவை இரண்டும் ஒன்று தாழ்ந்து ஒன்று உயரும் தராசு அல்ல. இரண்டும் இரண்டு சக்கரங்களாகச் சேர்ந்து சுழன்று வளர்ச்சியைச் சாதிப்பவை. இந்த இரண்டு சக்கரங்களும் முன்னேற்றப் பாதையில் சரளமாக ஓட ஏதுவாக புதிய வரவுசெலவுத் திட்டம் அமைந்துள்ளது.
செல்வத்தை மக்களுக்கு மீண்டும் விநியோகிப்பது உள்ளிட்ட ஏறுமுகப் போக்குகளுடன் கூடிய சமூகக் கொள்கைகள் எப்போதுமே பொருளியல் வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கும் என்பது பொருளியல் ஆய்வாளர்களின் கருத்து.
மிகக் கவனமாகத் திட்டமிட்டு பொருளியல் வளத்தை மக்களுக்குத் திருப்பிக் கொடுக்கும் அணுகுமுறையைக் கைக்கொண்டால் காலப்போக்கில் நிதி நிலை நிச்சயம் மேம்படும். இதில் வரி வளத்தை விரிவுபடுத்துவது, முன்னிலும் அதிகமான மக்கள் ஓய்வுக் காலத்தில் போதிய நிதிவளத்தைக் கொண்டிருக்கச் செய்வது ஆகியவை எல்லாம் உள்ளடங்கும்.
இப்படிச் செயல்படுவதன் மூலம் எதிர்கால நிதித் தேவைகளைக் குறைத்துக்கொள்ளலாம். நிதி வளம் வலுவாக இருந்தால் பொது முதலீடுகளுக்கு அதிக வழி பிறக்கும். இதுவும் வளர்ச்சியைத் தூண்டிவிடும்.
சுகாதாரம், கல்வியை உயர்த்த செய்யப்படும் சமூக முதலீடுகள் ஊழியர்களின் தரத்தை உயர்த்தும். இதன் விளைவாக உற்பத்தித்திறன் கூடும்.
பொருளியல் வளரவேண்டுமானால் அதற்கு உற்பத்தித்திறன் அதிகரிப்பு மிக முக்கிய உந்து சக்தி என்பதை மறந்துவிடக்கூடாது.
நிதி வளத்தைச் செலவிட்டு ஊழியர்களின் தேர்ச்சிகளை மேம்படுத்தினால், அவர்கள் காலத்திற்கேற்ப புதுப்புதுத் தேர்ச்சிகளைக் கற்பிக்க ஏற்பாடுகளைச் செய்து வந்தால் ஊழியர்களுக்கு மட்டுமன்றி நிறுவனங்களுக்கும் நன்மை.
முதியவர்களுக்கு அளிக்கப்படும் சம்பள மானியங்கள் பொருளியல் ரீதியில் உதவும். இந்தக் கொள்கையால் ஊழியர் அணி வளமடையும்.
மக்களிடையே ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்கான சமூகக் கொள்கைகள் பிணைப்புமிக்க, நல்லிணக்கமிக்க சமூகத்தைச் சாதிக்கும்.
இதனால் அரசியல் நிலைப்படும். இது எதிர்கால வளர்ச்சியை உறுதிப்படுத்தும் என்பதால் தொழில்துறையில் சில தரப்புகளில் நிலவும் கவலை தேவையற்ற ஒன்று என்பதே திண்ணம்.