புதிய சட்ட பட்டதாரிகளும் பல ஆண்டுகாலம் பெயர் பெற்ற வழக்கறிஞர்களும் சம்பந்தப்பட்ட தவறான நடத்தை பற்றிய புகார்கள் தொல்லை தருபவையாக இருக்கின்றன.
வழக்கறிஞர் என்பவர் நல்ல நிபுணத்துவ ஞானம், திறமை எல்லாவற்றுக்கும் மேலாக நம்பிக்கை மிக்கவராக இருக்க வேண்டும் என்று பொதுவான கருத்து நிலவுவதே இதற்கான காரணம்.
ஆகையால் நீதிமன்ற அதிகாரி என்ற முறையில் வழக்கறிஞர் உயரிய நன்னடத்தையைக் கொண்டு இருக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.
அவர்கள் தங்கள் நியதிகளில் இருந்து தவறும் பட்சத்தில் வழக்கறிஞர்கள் சங்கமும் நீதிமன்றமும் அவர்களுக்குத் தண்டனை விதிக்கும் நிலை ஏற்பட்டுவிடும்.
நிபுணத்துவ தரங்களை, நியதிகளை வழக்கறிஞர்கள் மீறும் போக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளது என்று சிங்கப்பூரின் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், கடந்த ஜனவரியில் சட்ட ஆண்டைத் தொடங்கிவைத்தபோது கவலை தெரிவித்தார்.
சட்டத் தொழிலுக்கு என்றே வழிவழியாக நடப்பில் இருந்துவரும் நன்னெறிகளைப் பேணி வளர்க்க இந்தத் தொழில்துறை தனக்குத்தானே முயலவில்லை எனில் நியதிகள், நிபுணத்துவ தரங்கள் குறைவது மேலும் மோசமாகிவிடும் என்று அவர் எச்சரித்தார்.
இப்படி அச்சம் தெரிவிக்கப்பட்டு இருப்பது முதலும் அல்ல; முடிவும் அல்ல; வழக்கறிஞர்கள் தங்களை கௌரவமான தொழிலர்கள் என்று எப்படி பார்க்கிறார்கள் என்பதில் கணிசமான மாற்றங்கள் இடம்பெற்றாலொழிய இது இடம்பெறவே செய்யும்.
வழக்கறிஞராக, சொலிசிடராக தொழில் நடத்த அனுமதிக்கப்படுவதற்கு முன் வழக்கறிஞர்கள் அனைவரும் சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொள்ளவேண்டும். உண்மை, நேர்மையுடன் நடந்துகொள்வதாக அவர்கள் அந்தப் பிரமாணத்தில் உறுதி தெரிவிப்பார்கள்.
அந்த உறுதியானது, இயற்கை யிலேயே அமைந்த ஒரு நன்னெறியாக இருக்க வேண்டியது அவசியம் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஒரு வழக்கறிஞரின் நடத்தை, ஒரு மனிதர் என்ற முறையில் அவருக்கு அல்லது அவருடைய தொழிலுக்கு நேர்மையற்றதாக இருந்திருக்குமேயானால் அவர் சட்டத் தொழில் சட்டத்தின்கீழ் ஒழுங்குமுறை நடவடிக்கைக்கு ஆளாகக்கூடிய நிலை வரலாம்.
இருந்தாலும்கூட நிபுணத்துவ தரங்கள் மீறப்படுவதற்கு என்ன காரணம்? வழக்கறிஞர்கள், குடிமக்கள் என்ற முறையில் நாம் யார் என்பது பற்றி நமது நன்னெறிகளால் தெள்ளத்தெளிவாக வரையறுக்கப்படாமல் இருப்பது அநேகமாக காரணமாக இருக்கலாம்.
ஒரு தொழிலின் தேவைகள், நலன்களோடு தொழிலை லாபகரமாக நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால் சட்டத் தொழிலிடம் இப்போது நன்னெறி சவால்களைச் சமாளிக்கும் ஆற்றல் அல்லது விருப்பம் குறைவாக இருக்கக்கூடும்.
இந்தத் தொழிலின் நன்னெறி நியதிகள் சரிவதை எப்படி தடுக்கலாம்?
சட்டத் தொழிலுக்கான நன்னெறி களையும் தார்மீக நியதிகளையும் மீண்டும் உருவாக்கும் நோக்கத்தில் உத்தி ஒன்றை உருவாக்கும்படி ஒரு குழுவை தலைமை நீதிபதி பணித்தார்.
உண்மையிலேயே அதன் பணி சிரம மானது. எங்கிருந்து அவர்கள் தொடங்குவர்? சட்டத்தொழிலை ஏற்கெனவே சட்டம், நடத்தை விதிகள், உள்ளிட்ட பல விதிகள் கட்டுப்படுத்துகின்றன. ஆகையால் வழக்கறிஞர்களுக்கு நடத்தை விதிகளை அதிகப்படுத்தலாம் என்ற யோசனை பலன்தராது போகலாம்.
வழக்கறிஞர்கள் சங்கமும் சம்பந்தப்பட்ட தரப்புகளும் மேலும் விழிப்புடன் இருந்து மேலும் கடுமையான நடவடிக்கைகளை அமலாக்கினால் தவறான நடத்தைகளைத் தடுப்பதற்கு அநேகமாக உதவி கிடைக்கலாம். நன்னெறிகள் சரிவதைத் தடுக்க தனிப்பட்டவர்களும் சரி, ஒட்டுமொத்தமாக இந்தத் தொழில்துறையும் சரி உடனடியாக ஏதாவது செய்தாகவேண்டும்.
அடுத்ததாக, பல்கலைக்கழகங்களிலும் சட்டப் படிப்பிலும் அதற்கு அப்பாலும் நடைமுறைச் சட்ட நியதிகளைப் போதிப்பதற்கான நம் முயற்சிகள் இரு மடங்காக வேண்டிய தேவை உள்ளது.
வழக்கறிஞரின் பெரும்பாலான பணி களும் இந்தத் தொழிலைப் பற்றிய பொதுவான எண்ணமும் நம்பிக்கை, நேர்மை, நியாயத்தையே சார்ந்து இருக்கிறது என்று நாம் கருதுகிறோம் என்பதால் நன்னெறி நியதிகளைக் கற்றுக்கொள்வது முக்கியமான ஒன்று.
அதோடு, பல்கலைக்கழகங்கள், வழக்கறிஞர்கள் சங்கம், சட்டப் பயிலகம் ஆகியவை நடத்தும் உரை நிகழ்ச்சிகள், ஆய்வரங்குகளில் நன்னெறிகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட வேண்டிய தேவையும் இருக்கிறது. நன்னெறி என்பது வாழ்நாள் கற்றல் நடைமுறையாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
நம்மிடத்திலும் நம் பொறுப்பில் இருப்போரிடத்திலும் சரியான நல்ல நியதிகளைப் பேணி வளர்க்கவேண்டும் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.
சட்டத்தொழிலை நடத்த அனு மதிக்கப்படும்போது வழக்கறிஞர்கள் கொடுக்கும் உறுதிமொழியை ஒவ்வோர் ஆண்டும் அவர்கள் தொழில் சான்றிதழைப் புதுப்பிக்கும்போதும் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டியதை தேவையான ஒன்றாக வேண்டும்.
கௌரவமான ஒரு தொழிலை நடத்துவோர் என்ற முறையில் தங்களிடம் இருந்து தொடர்ந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை வழக்கறிஞர்களுக்கு இது நினைவூட்டும்.
சட்டத் தொழில்துறை தான் சேவையாற்றும் சமூகத்திற்கான தனது இலக்குகள், வேலைகளை மீண்டும் ஆராய்வதற்கு இது தக்க தருணம்.
பல்கலைக்கழகங்களில் நம் மாணவர்களிடையே நாம் வலியுறுத்துவதைப் போல் நல்ல ஒரு வழக்கறிஞர் நல்ல ஒரு மனிதராகவும் இருக்க முடியும்.