முரசொலி
உலகம் இனிமேல் தொழில்நுட்பம் இன்றி செவ்வனே செயல்பட இயலாத நிலை ஏற்பட்டுவிட்டது. பொருளியலில் மட்டுமன்றி மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் கணினித் தகவல் தொழில்நுட்பம் எங்கும் எதிலும் செலுத்தும் ஆதிக்கம், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நாள்தோறும் கூடி வருகிறது.
அந்தத் துறையில் புத்தாக்கங்களும் புதுப்புது நுட்பங்களும் இடம்பெறாத நாள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலவரம் இருக்கிறது.
எதிர்காலத்தில் தொழில்நுட்பங்களின் பங்கு இன்னும் வேகத்தில் அதிகரிக்குமே தவிர குறையாது என்பது திண்ணம்.
தகவல்தொழில்நுட்பத் தேர்ச்சி என்பது இடைவிடாமல் மேம்படுத்திக்கொண்டே வரவேண்டிய முக்கியமான ஒன்று என்பது எல்லாருமே உணர வேண்டியது. அது காலத்தின் கட்டாயம்.
இதை நிறுவனங்களும் நன்றாக உணர்ந்து கொண்டுள்ளன. தொழில்நுட்பத்தை விட்டால் நிகழ்காலமும் எதிர்காலமும் நமக்கு இல்லை என்ற நம்பிக்கையுடன் அவை செயல்படுகின்றன.
என்றாலும் பல்வேறு உலக நிலவரங்கள் காரணமாக உலகளாவிய அளவில் இந்தத் தொழில்துறை இப்போது அவ்வளவு நல்ல நிலையில் இல்லை. கொஞ்சம் மெதுவாகத்தான் போகிறது.
கொரோனா தலைவிரித்து ஆடியபோதும் மற்ற துறை ஊழியர்களைவிட வேலையைப் பொறுத்தவரை இந்தத் துறையினர் பாதிக்கப்படவில்லை.
ஆனால் வேலை பார்க்கும் பாணி மாறியது. வீட்டில் இருந்தே வேலை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தக் காலத்திலும், உலக அளவில் பல நிறுவனங்கள் எதிர்காலத்தைக் கணித்து தங்களுக்கு ஊழியர் தேவை என்று வேலைக்கு ஆள்களைச் சேர்த்தன.
கணினி வழி நடக்கும் வர்த்தகமும் கூடியது. அதைச் சமாளிக்கவும் அதிக ஊழியர்கள் தேவைப்பட்டனர்.
இந்த நிலையில், கொரோனா ஒரு வழியாக ஒடுங்கியது. ஆனால் கொவிட்-19 காலத்தில் படுத்த உலகப் பொருளியல் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்குக் கிருமித்தொற்றுக்குப் பிறகு வேகமாக தலைதூக்கவில்லை. அப்படிப்பட்ட ஒரு சூழலில் உக்ரேன் போரும் இடம்பெற்றுவிட்டது.
இதனால் பல உலக நிறுவனங்களுக்குச் சென்ற ஆண்டு சரியில்லாத ஆண்டாகிவிட்டது. வருமானம் குறைந்துவிட்டது. இந்த ஆண்டும் நல்ல ஆண்டாக இருக்கும்போல் தெரியவில்லை.
இதன் காரணமாக பெரும் பெரும் உலகத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஊழியர்களைக் குறைக்கவேண்டிய தேவை ஏற்பட்டு அது இன்னமும்கூட நடந்து வருகிறது.
பொருளியல் சரியில்லை. வட்டி விகிதம் அதிகரிப்பு காரணமாக லாபத்தைப் பார்க்க முடியாமல், செலவைக் குறைக்க முடிவு செய்து, அத்தகைய நிறுவனங்கள் ஆயிரக் கணக்கில் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டன.
ஆனாலும் இந்த நிலை தற்காலிகமானது தான் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறை இப்போது எதிர்நோக்கும் பிரச்சினை, நிலவரங்களுக்கு ஏற்ப அப்போதைக்கு அப்போது மாறிமாறி வரும் ஒன்றே.
அந்தத் துறை அடிப்படையில் மிக வலுவாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை.
கணினி மென்பொருள், தகவல் தொழில்நுட்பச் சேவைகள் காரணமாக உலக தகவல்தொழில்நுட்பச் செலவினம் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டில் 2.4% கூடும் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இது மட்டுமல்ல, தொழில்நுட்பப் புத்தாக்கங்கள்தான் பொருளியலை உந்தித் தள்ளக்கூடிய மிக முக்கியமான இயந்திரமாக இனிமேலும் தொடர்ந்து இருந்துவரும்.
ஊழியர் வளத்தை மிகவும் விவேகமாக, செம்மையாகப் பயன்படுத்திக்கொண்டு சமூகத்தில் செல்வச் செழிப்பைக் அதிகபட்சமாக்க தொழில்நுட்பப் புத்தாக்கங்கள் உதவி வருகின்றன. உலக அளவில் தகவல் தொழில்நுட்பத் துறை இப்படி இருக்கையில், சிங்கப்பூரில் நிலவரம் வேறு மாதிரியாக உள்ளது. சிங்கப்பூரில் தொழில்நுட்பத் துறைக்குச் சென்ற ஆண்டு நல்ல, அருமையான ஆண்டாக இருந்தது.
கணினித் தொழில்நுட்பத்தைத் தழுவிக்கொள்ளவில்லை எனில் எதிர்காலம் இல்லை என்பதை உணர்ந்திருக்கும் சிங்கப்பூர் நிறுவனங்கள், இந்தத் துறையைச் சேர்ந்த தலைசிறந்த வல்லுநர்களை வேலையில் சேர்த்தன.
மனிதவள அமைச்சு, வருடாந்திர வேலை வாய்ப்புகள் பற்றிய அறிக்கை 2022ஐ வெளியிட்டது. சிங்கப்பூர் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆற்றல்மிக்க ஊழியர்களைச் சேர்க்க திக்குமுக்காடுகின்றன என்பது அந்த அறிக்கை மூலம் தெரிய வருகிறது.
சிங்கப்பூரில் தகவல், தொடர்புத் துறையில் கிடைத்த அனைத்து வேலைகளையும் பார்க்கும்போது, அவற்றில் 10ல் கிட்டத்தட்ட ஏழு வேலைகள் புதியவையாக இருந்தன. இதர துறைகளில் இந்த நிலை இல்லை. இது மூன்றாவது ஆண்டாகத் தொடரும் ஒரு நிலவரமாக இருக்கிறது.
சிங்கப்பூரில் தகவல்தொழில்நுட்பத் துறை உருமாறி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
புதிய புதிய வேலைகளுக்குப் புதிய புதிய தேர்ச்சிகள் தேவைப்படுகின்றன. இங்கு செயல்படும் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் இதை சரியாக உணர்ந்துகொண்டுள்ளன.
நிறுவனங்கள் அதிநவீன திட்டத்தைத் தொடங்க முடிவு எடுக்கையில், அதற்குத் தோதான தேர்ச்சிமிக்க ஊழியர்களை உடனே பெறவேண்டும் என்பது மிக முக்கியம். இதுதான் இதில் பிரச்சினை. தேவைப்படும் தேர்ச்சிகளுடன்கூடிய ஊழியர்களைப் போதிய என்ணிக்கையில் தயார் செய்வதற்குள் வாய்ப்பு வேகமாக நழுவிக் கடந்து போய்விடக்கூடிய ஆபத்து உண்டு.
வாய்ப்பு இருந்தும் அதற்கு ஏற்ற ஊழியர் வளம் இல்லை எனில் பலன் இன்றிப் போய்விடும் என்பதால் சிங்கப்பூரில் செயல்படும் கல்வி, பயிற்சி நிறுவனங்கள் இத்தகைய ஒரு நிலை வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
அவை பலதுறை ஆற்றல்களுடன், நிகழ்காலத்திற்கு, வருங்காலத்திற்குப் பொருத்தமான தொழில்நுட்ப ஊழியர்களை உடனுக்குடன் தொடர்ந்து உருவாக்கி எதிர்காலத்தை உறுதிப்படுத்த வேண்டும்.