ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியம், கடந்த புதன்கிழமை உலக மக்கள்தொகை அறிக்கை 2023ஐ வெளியிட்டது. அதன்படி, உலகில் 8.045 பில்லியன் மக்கள் வசிக்கிறார்கள் என்று மதிப்பிடப்படுகிறது.
உலக மக்களில் 65 விழுக்காட்டி னருக்கு வயது 15 முதல் 64 வரை. 10 முதல் 24 வரை வயதுள்ளவர்கள் 2%. உலகில் வாழ்வோரில் 100 பேரில் பத்து பேருக்கு வயது 65க்கும் அதிகம் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
அந்த அறிக்கை, எதிர்பார்க்கப்பட்ட மிக முக்கியமான ஒரு தகவலையும் தெரிவித்துள்ளது. அதாவது, இந்தியா இன்னும் ஓரிரு மாதங்களில் மக்கள்தொகையில் சீனாவை விஞ்சிவிடும் என்று அது தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மக்கள்தொகை இந்த ஆண்டின் மத்தியில் 1.428 பில்லியனாக உயரும். சீனாவில் 1.425 பில்லியன் மக்கள் வசிப்பார்கள். சீனாவைவிட இந்தியாவில் சுமார் 3 மில்லியன் மக்கள் அதிகமாக இருப்பார்கள்.
அதிகாரபூர்வ தகவல்கள், பிறப்பு, இறப்பு, அனைத்துலக குடியேற்றம் முதலான பலவற்றின் அடிப்படையில் ஐநா அறிக்கை உருவாக்கப்படுகிறது.
என்றாலும்கூட, ஒரு நாட்டின் உண்மையான மக்கள்தொகை எவ்வளவு என்பது அந்த நாடு நடத்தும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலமாகவே நிச்சயிக்கப்படும்.
இந்தியாவில் 1872ஆம் ஆண்டில் இருந்து மக்கள்தொகை கணக்கெடுப்பு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வந்துள்ளது.
கடைசியாக, 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தியாவில் 1.2 பில்லியன் மக்கள் வசிப்பதாக அது கூறியது. பிறகு 2021ஆம் ஆண்டில் நடக்க இருந்த கணக்கெடுப்பு கொரோனா பாதிப்பு காரணமாக நடத்தப்படவில்லை.
மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த குறைந்தபட்சம் ஈராண்டு அவகாசம் தேவை. அடுத்த ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதால் இந்தியா அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பை எப்போது நடத்தும் என்பது உறுதியாகத் தெரியவில்லை.
இந்த நிலையில், உலக அமைப்பின் தகவல்களை வைத்துப் பார்த்தால் இந்தியாவின் மக்கள் தொகை 2050வது ஆண்டில் 1.67 பில்லியனாக உயர்ந்து பிறகு 2100ஆம் ஆண்டு வாக்கில் 1.54 பில்லியனாக நிலைப்படும் என்றுதெரிகிறது. வரும் 2064ஆம் ஆண்டில் இந்தியாவில் உச்சமாக 1.7 பில்லியன் மக்கள் வசிப்பார்கள் என்பது உலக அமைப்பின் இப்போதைய மதிப்பீடு.
இந்தியாவில் இப்போது வசிக்கும் மொத்த மக்களில் 68 விழுக்காட்டினர் 15க்கும் 64க்கும் இடைப்பட்ட வயதுள்ளவர்களாக இருப்பார்கள். இவர்கள் வேலை பார்க்கும் பிரிவினர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
மக்கள்தொகையில் கால்வாசி பேருக்கு வயது 14 வரை இருக்கும். 18 விழுக்காட்டினர் 10 வயது முதல் 19 வயது வரைப்பட்டவர்களாகவும் வெறும் 7 விழுக்காட்டினரே 65க்கும் அதிக வயதுள்ளவர்களாகவும் இருப்பார்கள் என்று ஐநா மதிப்பிடுகிறது.
இந்தியா, ஆசியக் கண்டத்தில் அமைந்துள்ளது என்றாலும் அந்த நாடே ஒரு துணைக் கண்டம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கண்டத்திற்குஉரிய அத்தனை தன்மைகளும் இந்தியாவிடம் இருக்கின்றன.
கிழக்கே பாலைவனம், மேற்கே உலகிலேயே அதிக மழை பொழியும் சிரபூஞ்சி, வடக்கே இமயமலை, தெற்கே தாழ்ந்த பீடபூமி என்று பல அம்சங்களையும் உள்ளடக்கிய இந்தியா, தொன்றுதொட்டே மனிதவளத்தை மாபெரும் சக்தியாகக் கொண்டது.
மக்கள்தொகை அதிகம் என்றாலும் இந்தியாவில் மக்கள்தொகை வளர்ச்சி வேகம் குறைந்து வருவதாக ஐநா குறிப்பிடுகிறது. இந்தியா தன் மனித வளத்தை எப்படி விவேகமாகப் பயன்படுத்திக்கொள்ளப்போகிறது என்பதில்தான் அதன் வெற்றி இருப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களும் அதற்கு 1.4 பில்லியன் வாய்ப்பாக இருப்பார்கள் என்று கூட தெரிவிக்கப்படுகிறது.
உலக அளவுடன் ஒப்பிடும்போது இந்தியாவில்தான் இளையர்கள் வளம் அதிகமாக இருக்கும். முதியவர்களும் மிகக் குறைவாக இருப்பார்கள். ஆகையால், ஆதரிக்க வேண்டியவர்களைவிட ஆதரிப்பவர்கள் அதிகமாக இருக்கக்கூடிய மிகப்பெரிய அனுகூலம் இந்தியாவிற்கு இருக்கும்.
ஊழியர்கள் அபரிமிதமாக இருப்பார்கள். வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் உற்பத்தித்துறை வாய்ப்பு வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ள அதிக முதலீடுகளைச் செய்யும்.
உள்நாட்டுப் பயனீடு கிடுகிடுவென அதிகரிக்கும் என்பதால் உலகளவில் ஏற்படக்கூடிய அதிர்வலைகளை இந்தியா சமாளிக்க அது பேருதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
உலகின் பல நாடுகளில் நிலவரங்கள் வேறுபட்டு இருக்கின்றன. இளையோரின் எண்ணிக்கையைவிட முதியோர் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கிறது.
இந்த நிலையில், அத்தகைய நாடுகளுக்கும் உதவக்கூடிய பெரும் தொழிலாளர் வளத்தையும் இந்தியா கொண்டிருக்கும்.
இந்தியா, வரும் 2030ல் ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளை விஞ்சி உலகின் ஆகப் பெரிய மூன்றாவது பொருளியல் நாடாகத் திகழும். அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சராசரியாக 6.3% ஆக இருக்கும் என்றெல்லாம் கணிக்கப்பட்டு இருக்கிறது.
இப்போதே அதனுடைய பொருளியல் 7 விழுக்காட்டு வளர்ச்சி அளவுக்கு வேகமாக விரிவடைந்து வருகிறது.
இந்திய மக்களின் சராசரி வயது 28.4 ஆண்டுகள். இளையர்கள் அதிகமாக இருப்பதால் அவர்கள் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து உடனுக்குடன் வேகமாக மாறிக்கொள்வர் என்றும் நம்பப்படுகிறது.
மக்கள்தொகை பெருக்கத்தை இந்தியா திறம்பட கையாண்டால் மாபெரும் பொருளியல் சக்தியாக இந்தியா உருவெடுக்கும். இதைச் சாதிக்க இந்தியா அடிப்படை வசதிகள், வேலை வாய்ப்புகள், உற்பத்தி பெருக்கம் உள்ளிட்ட இமாலய சவால்களைச் சமாளிக்க வேண்டி இருக்கும்.
இவற்றை எல்லாம் வெற்றிகரமான முறையில் செய்து முடித்து மக்கள் தொகையை மாபெரும் ஆக்ககரமான சக்தியாக இந்தியா பயன்படுத்திக் கொள்ளும் என்று நம்புவோம்.