ஏறத்தாழ 21 ஆண்டுகளுக்கு முன்னர் பிப்ரவரி 2002ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் கோ சோக் டோங் தந்த உந்துதலால் ‘சிங்கப்பூர் உருமாற்றம்’ என்ற செயற்குழு தொடங்கப்பட்டது.
பொருளியல் வளத்தை மட்டும் பிரதான இலக்காக வைத்துக்கொள்ளாமல் கலை, விளையாட்டு, சமூக நலன் போன்ற மற்ற அம்சங்களையும் சிங்கப்பூரர்கள் முக்கியமானவையாகக் கருதவேண்டும் என்பதைச் சாதிக்க அந்தக் குழு முற்பட்டது.
அந்த நேரத்தில் ‘5சிஸ்’ (5Cs) என்று அறியப்படும் வாழ்க்கைத்தொழில், கூட்டுரிமை வீட்டில் குடியிருப்பு, கடன் அட்டை, கார், மனமகிழ் மன்ற உறுப்பியம் ஆகியவை சிங்கப்பூரர்களின் பிரபல விருப்பங்களாக இருந்தன.
இப்போது ‘5சிஸ்’ பற்றிய பேச்சு மறைந்துவிட்டது. அதனால் அந்தச்செயற்குழு நோக்கத்தைச் சாதித்தது என்று கூறலாமா? அது தன் இலக்கை அடைந்துவிட்டதா?
வாழ்வாதாரம், நடைமுறைகள் காலத்தோடு மாற சிங்கப்பூரர்களின் இலக்குகளும் புது பரிமாணங்களை எடுத்துள்ளன. வாழ்க்கைச் சூழல் மாறி விலைவாசியும் கடந்த ஆண்டுகளில் உயர்ந்து உள்ளது. இதனால் மக்களின் இலக்குகளும் திசை மாறியுள்ளன.
ரஷ்யா-உக்ரேன் போரால் ஏற்படும் பணவீக்கம் குறிப்பாக அடிமட்ட, நடுத்தர குடும்பங்களைப் பாதிக்கும் என்று நாடாளுமன்றத்தில் ஏப்ரல் மாதம் பேசிய பிரதமர் லீ சியன் லூங் கூறினார். அமெரிக்கா-சீனா நாடுகளுக்கு இடையிலான பூசல்களும் அனைத்துலக வர்த்தகக் கட்டமைப்பு முறிவதும் சிங்கப்பூரைப் பாதிக்கும் என்று திரு லீ மேலும் விளக்கினார்.
சிங்கப்பூரின் பொருள், சேவை வரி அதிகரிப்பையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இவ்வாண்டு 8 விழுக்காடாக மாறி, அடுத்த ஆண்டு 9 விழுக்காடாக உயரும் வரி, விலைவாசியை மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.
உடனடி எதிர்காலத்திற்கு அரசாங்க திட்டங்கள் உதவினாலும் காலப்போக்கில் சமுதாய சூழலுக்கு ஏற்ப நாம் நம்மை தகவமைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிவிடும்.
இதன் பின்னணியில் ‘5சிஸ்’ நமக்கு எவ்வளவு பொருந்தும்?
கார் வைத்திருப்பது இன்று வரையிலும் ஒருவரின் சமுதாய தகுதி நிலையைக் குறிக்கும் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஆனால் சீரான தலைசிறந்த பொது போக்குவரத்து வசதிகள் உள்ள சிறு நாட்டில் நம்மில் எத்தனைப் பேருக்கு கார் அவசியம்? வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணங்கள், ஏப்ரல் 19ஆம் தேதி வரலாற்றில் காணாத உச்சத்தை தொட்டன.
சிறிய கார் பிரிவில் சிஓஇ கட்டணம் $103,721 எனவும் பெரிய கார்கள், கூடுதல் சக்திவாய்ந்த மின்சார வாகனங்கள் ஆகியவற்றைக் கொண்ட பிரிவில் கட்டணம் $120,889 எனவும் பதிவாகின. கைக்கு எட்டாத தூரத்தில் கார் விலை ஏற்றம் கண்டு வருகிறது.
காரைப் போல தனியார் வீடுகள் வைத்திருப்பதும் தகுதி நிலையைக் குறிக்கும் வசதியாகக் காணப்படுகிறது.
வீட்டு விலைகளும் கணிசமாகக் கூடியுள்ளன. நான்கறை அல்லது அதற்கும் சிறிய வீடமைப்பு வளர்ச்சி கழக (வீவக) வீடுகளை வாங்கும் குடும்பங்களுக்குக் கூடுதலாக $30,000 வீடமைப்பு மானியம் கிடைக்கும் என்று 2023 வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கம் தெரிவித்தது.
வீவக வீடுகளுக்கு அரசாங்கம் உதவிகளை வழங்கி வந்தாலும் தனியார் வீடுகளை வாங்க விரும்பும் மக்களின் ஆசை வருங்காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு எளிதாக நிறைவேறும் ஒன்றாக இராது.
கடன் அட்டை பயன்பாடு அதிகரிக்கிறது. கொவிட்-19 கிருமித்தொற்று கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில் வெளிநாட்டுப் பயணம், வணிகம், உணவருந்துவது போன்றவை மீண்டெழுந்ததால் கடன் அட்டைகளின் பயன்பாடும் அதிகரித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022ஆம் ஆண்டில் தனது கடன் அட்டை நிதிப் புழக்கம் 20% கூடியதாக டிபிஎஸ் வங்கி கூறியது.
இளைய தலைமுறையினர் தமது வேலை மீது கொண்டுள்ள கண்ணோட்டமும் வெகுவாக மாறுகிறது. நம் முன்னோரைப் போல பல ஆண்டுகளாக விசுவாசத்துடன் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி, சம்பளம் ஈட்டி, பணம் சேமிக்கும் பழக்கம் எல்லாம் மலையேறிவிட்டது.
ஒரு வேலையில் இரண்டு, மூன்று ஆண்டுகள் இருந்தாலே அது பாராட்டுக்கு உரியதாகிவிடுகிறது. பணம், பதவி மட்டும் பாராமல் மனநிறைவு, விருப்பத்திற்கு ஏற்ற வேலை, மகிழ்ச்சியாக இருப்பது என்று வேலை சார்ந்த இலக்குகளும் மாறிவிட்டன.
முந்தைய காலங்களில் நகர்ப்புற கேளிக்கை விடுதிகளில் உறுப்பினராக சேர்வதன் மூலம் மக்களில் பலரும் புதியவர்களைச் சந்தித்து விளையாட்டு, உணவு அருந்துவது போன்றவற்றில் ஈடுபட்டு பொழுதைக் கழிப்பார்கள்.
சமூக ஊடகம், தொழில்நுட்பம், மெய்நிகர் இணைய விளையாட்டுகள் இளையரின் கவனத்தை ஈர்த்து வரும் இப்போதைய உலகில் அதுபோன்ற மன்றங்களில் உறுப்பினராவது பலருக்கும் அவசியமில்லாமல் போய்விட்டது.
நான் சிறுவனாக இருந்தபோது ஒவ்வொரு விடுமுறை நாளும் அடுக்குமாடி கட்டடத்தின் கீழ்த்தளத்தில் சிறார்களுடன் காற்பந்து விளையாடுவேன்.
ஒருவருக்கு ஒருவர் கேலி செய்து கொண்டும் போட்டி போட்டுக்கொண்டும் விளையாடுவோம், சண்டையிடுவோம், ஆனால் அனைத்தையும் தாண்டி சகோதரர்களைப் போல இணைந்துகொள்வோம். இப்போதைய பல விளையாட்டுப் பூங்காக்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
‘5சிஸ்’ கோட்பாட்டை அலசிப் பார்ப்பதில் ஒன்று நிச்சயமாக தெரிகிறது. கடந்த 20 ஆண்டுகளில் சிங்கப்பூர் பல மடங்கு மாறிவிட்டது என்பதுதான் உண்மை. இக்கால சிங்கப்பூரர்களின் தேவைகள் வேறு.
பொருள் வசதி மட்டும் நம் சமுதாயத்திற்குப் போதாது, உயர்ந்த வாழ்க்கைத்தரத்தையும் எதிர்பார்க்கிறோம்.
பல்வேறு உலகப் பிரச்சினைகளுக்கு இடையே பாதுகாப்பான, சுத்தமான, வசதியான ஒரு நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது என்றாலும் எதிர்கால சவால்களைச் சமாளிப்பதில் ஒரே சமுதாயமாக நாம் கொண்டுள்ள இலக்குகளும் முக்கிய பங்களிக்கின்றன.