அண்மையில் சிங்கப்பூர் அரசாங்கப் பங்காளித்துவ அலுவலகம் (எஸ்ஜிபிஓ) திறக்கப்பட்டது.
பல திட்டங்களைக் கைவசம் வைத்திருந்து, அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றும் எண்ணம் சிலருக்கு இருக்கலாம். அவர்களுக்குக் கைகொடுக்க எஸ்ஜிபிஓ அமைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்துக்கும் குடிமக்களுக்கும் இடையிலான பங்காளித்துவத்தை விரிவுபடுத்தி வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
குடிமக்களுக்கும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தவும் குடிமக்கள் நிதியுதவி பெற வழிகாட்டவும் எஸ்ஜிபிஓ உதவிக்கரம் நீட்டும். இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை அடையாளம் காண எஸ்ஜிபிஓ, அரசாங்க அமைப்புகளுடனும் சேர்ந்து பணியாற்றும். அரசாங்கத்துடன் பங்காளித்துவம் வைத்துக்கொள்வதற்கான வழிமுறைகளை எளிதாக்குவதும் சீராக்குவதும் எஸ்ஜிபிஓ அலுவலகத்தின் இலக்கு.
சிங்கப்பூரர்களின் சார்பில் முடிவெடுத்து, திட்டங்களைச் செயல்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாக இருக்கலாம். ஆனால், எல்லாவற்றுக்கும் அரசாங்கத்திடம் தீர்வு இருக்காது. அந்த வகையில் பங்காளித்துவங்கள் உதவும்.
சுதந்திரம் அடைந்த பிறகு பல ஆண்டுகளாகக் காணப்பட்ட நிலையுடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூர் பொருளியல் இப்போது பெரிதும் மேம்பட்டுள்ளது, சமூகம் நன்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது. மேலும், சிங்கப்பூர் குடிமக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்கின்றனர், தங்களின் தேவைகளை வெளிப்படையாக முன்வைக்கின்றனர்.
இதுவே இயல்பு. எஸ்ஜிபிஓ, உருமாறிவரும் இந்த தேசத்தில் பொதுமக்களின் மனநிலையை நன்கு புரிந்துகொள்ள முனையும்; குடிமக்களிடையே அவர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலும் பேச்சுவார்த்தை நடத்த வகைசெய்யும்; தேவைப்படும்போது சட்டதிட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவரும் நோக்கில் அதிகாரிகளிடம் கருத்துகளைத் தெரியப்படுத்தும்.
சமுகக் குழுக்களுடன் இணைந்து செயல்படும் அரசாங்க அமைப்புகள் ஏற்கெனவே இருக்கின்றன. ஆனால், எந்தெந்த அமைப்புகளை நாடவேண்டும் என்று முடிவுசெய்ய மக்கள் சிரமப்படக்கூடும்.
அதற்குத் தீர்வாக, எல்லா வகைப் பங்காளித்துவங்களையும் கையாளும் ஒரு தளமாக எஸ்ஜிபிஓ விளங்கும். பெரிய, சிறிய பங்காளித்துவங்களுக்கு இது பொருந்தும். தாங்கள் எழுப்பும் குரல், தங்களின் கருத்துகள், அக்கறைகள் ஆகியவை முடிந்தவரை கருத்தில்கொள்ளப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற உணர்வை சிங்கப்பூரர்களிடையே ஏற்படுத்த பங்காளித்துவங்கள் வகைசெய்கின்றன.
அதேவேளை, பொதுமக்களின் கருத்துகளுக்குச் செவிசாய்த்து நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளை மேம்படுத்திக்கொள்ளும் பொறுப்பு எல்லா அமைச்சுகளுக்கும் அரசாங்க அமைப்புகளுக்கும் உள்ளது. எஸ்ஜிபிஓ மட்டும் இதைச் செய்யமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து சேகரிப்பது புதிய அலுவலகத்தின் பொறுப்புகளில் ஒரு சிறிய பங்கு மட்டுமே. அதிகாரிகளுடள் சேர்ந்து பணியாற்றி பங்காளித்துவங்களையும் இணைந்து செயல்படும் வழிமுறைகளையும் வலுப்படுத்த எஸ்ஜிபிஓ அதிகாரபூர்வக் கட்டமைப்பை உருவாக்கித் தரும்.
2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட முன்னேறும் சிங்கப்பூர் திட்டத்தில் (ஃபார்வர்ட் எஸ்ஜி) பங்காளித்துவங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சமூகப் பிணைப்புக்குப் புத்துயிர் வழங்க பல்வேறு வாழ்க்கைமுறைகளைச் சேர்ந்த சிங்கப்பூரர்களின் கருத்துகளைச் சேகரிப்பது இலக்கு. குறிப்பாக, தற்போது இருந்துவரும் சவாலான உலகச் சூழல் போன்ற காலகட்டங்களுக்கு இது பொருந்தும்.
துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங், “நாம் பங்காளிகளாக இணைந்து செயல்படும்போது பற்பல சாதனைகளைப் புரியலாம்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
தாங்கள் காண விரும்பும் மாற்றமாக தாங்களே விளங்க, முன்னேறும் சிங்கப்பூர் திட்டம், அதிலும் குறிப்பாக எஸ்ஜிபிஓ, சிங்கப்பூரர்களுக்கு வாய்ப்பளிக்கிறது.