தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்கள் பட்டியலில் இயக்குநர்களான நெல்சன், அட்லீ, லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளனர்.
அண்மையில் அவர்களின் படங்கள் வசூல் ரீதியாகப் புரிந்த சாதனைகள் தான் அப்பட்டியலில் இணைய முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். அப்படம் உலக அளவில் ரூ.600 கோடி வசூலைக் கடந்துள்ளது.
அடுத்து ஷாரூக்கான் நடித்து வெளிவந்த ‘ஜவான்’ படத்தை அட்லீ இயக்கியிருந்தார். அது ரூ.1150 கோடி வசூலைக் கடந்துள்ளது.
விஜய் நடித்த ‘லியோ’ படம் ரூ.500 கோடி வசூலை நெருங்கி வருவதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
இவர்கள் மூவர் மட்டுமே இந்த ஒரே ஆண்டில் மொத்தமாக ரூ.2200 கோடி வசூலைப் பெற காரணமாக இருந்திருக்கிறார்கள்.
அதனால் இவர்கள் இந்திய அளவில் புகழ்பெற்றுள்ளனர். இவர்களின் படத்தில் இணைய முன்னணி கதாநாயகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் அடுத்து ரஜினியின் 171வது படத்தை இயக்க உள்ளார். நெல்சன், அட்லீ அடுத்து யாரை இயக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.