கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. இது இவர் ஏற்கெனவே இயக்கிய ‘ஜிகர்தண்டா’ படத்தின் தொடர்ச்சி என்று தொடக்கத்தில் தகவல் வெளியானது.
ஆனால், ‘ஜிகர்தண்டா 2’ என்று தலைப்பு வைக்கப்படவில்லை.
“அவ்வாறு தலைப்பு வைத்தால் முதல் பாகத்தின் தொடர்ச்சி என்று ரசிகர்கள் கருதிவிடக்கூடும். எனவேதான் அதைத் தவிர்த்தோம்,” என்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
“முதல் பாகத்தில் இடம்பெற்ற கதையின் ஆன்மா மட்டும் இதில் இருக்கும். ஒரு குண்டர் கும்பலுக்குத் தலைவனாக இருக்கக்கூடிய குற்ற உலகத்திற்குள் கலையம்சம் கொண்ட ஓர் இயக்குநர் நுழைகிறான்.
“அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் குண்டர்களுடன் பழகும்போது அது எந்த விதமான மாற்றங்களை அந்த இயக்குநரிடம் ஏற்படுத்துகிறது என்பதையும் இப்படம் விவரிக்கும்,” என்பதுதான் கார்த்திக் சுப்புராஜ் அளிக்கும் விளக்கம்.
‘இரண்டாம் பாகம்’ என்று சொல்லலாம் என்றாலும் முழு படத்தையும் அவ்வாறு குறிப்பிட இயலாது என்று படக்குழுவினர் கூறுகின்றனர். அதேசமயம் புதிதாக இருக்க வேண்டும், ரசிகர்களைக் கவர வேண்டும் என்பதால்தான் ‘டபுள் எக்ஸ்’ என்று தலைப்பு வைத்ததாக இயக்குநர் தரப்பில் கூறப்படுகிறது.
“லாரன்ஸ் நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரை சரியான விதத்தில் பயன்படுத்தினால் நம் கண்முன் வேறு வடிவத்தில் வந்து நிற்பார். இந்தப் படத்திலும் அதுதான் நடந்திருக்கிறது.
“ஒருவர் வெளிப்படுத்தும் உணர்வுகளுக்கும் பேசும் வார்த்தைகளுக்கும் சரியான இடத்தை இன்னொருவர் கொடுக்க வேண்டும். அதை லாரன்ஸ், சூர்யா ஆகிய இருவருமே இந்தப் படத்தில் சரியாகச் செய்துள்ளனர்.
“மதுரையைச் சேர்ந்தவர், பழங்குடியிலிருந்து வந்த குண்டர் கும்பல் தலைவன், விதவிதமான ஆடைகளை அணிவதில் ஆர்வம் உள்ளவர் என்று தனது கதாபாத்திரத்துக்குத் தேவையானவற்றில் மிகுந்த ஆர்வத்துடன் கவனம் செலுத்தினார்.
“லாரன்ஸுக்கு எதிராக சரியான ஆள் வேண்டும் என்று நினைத்தேன். கதையை எழுதி முடித்ததுமே எஸ்.ஜே.சூர்யாதான் என்று மனதில் தோன்றிவிட்டது. அவரும் இயக்குநர் என்ற பொறுப்பை கைவிட்டு, முழுநேர நடிகராக மாறும் மும்முரத்தில் இருந்தார்.
“அதற்கான வெற்றிகளும் அவரைத் தேடி வந்தன. அந்தச் சமயம் அவர் இந்தப் படத்தில் இயக்குநராக நடிக்க வேண்டும் என்று நான் சொன்னபோது கொஞ்சம் யோசித்தார். பிறகு தயாராகிவிட்டார்,” என்று அண்மைய பேட்டியில் தெரிவித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.
லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இருவருமே ஒருவருக்கொருவர் நேர்த்தியாக விட்டுக்கொடுத்து நடித்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், இரு கதாபாத்திரங்களுமே வலுவானதாக அமைக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.
“இருவருமே அபாரமாக நடிக்கக்கூடியவர்கள். படத்தில் இருவருக்கும் இடையே முட்டல், மோதல், அன்பு என்று ஏதாவது நடந்தபடியே இருக்கும். இருவருமே அடிக்கடி ஒருவரையொருவர் பாராட்டிக் கொள்வார்கள்.
“இந்தக் கதையில் பெரிய ஆர்வம் ஏற்பட்டுத்தான் இரண்டு பேரும் நடிக்க முன்வந்தனர். படம் தொடங்கும்போது ஏற்பட்ட அறிமுகம் பிறகு விரிவடைந்து ஒன்றாகப் பழகி, தேர்ந்த நண்பர்கள் என்கிற அளவுக்குப் போய்விட்டனர்.
“மதுரைதான் இந்தப் படத்தின் கதைக்களம். நான் மதுரையில் பிறந்து வளர்ந்தவன்தான். எனக்கு அந்நகரின் மூச்சுக்காற்று நன்கு தெரியும். சினிமாவைக் கொண்டாடுவதில் இன்றுவரை மதுரைக்குதான் முதலிடம்.
“இந்திப் படங்கள், பாடல்கள், ஆங்கிலப் படங்கள் என்று வித்தியாசம் பார்க்காமல் கொண்டாடுவார்கள். மதுரை இப்போது நிறைய மாறிவிட்டது. எனினும் அதன் அசல் வடிவத்தை இந்தப் படத்தில் கொண்டு வந்திருக்கிறோம்,” என்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.