நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார் அனு இம்மானுவேல். கடைசியாக ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த அவர், தற்போது கார்த்தி ஜோடியாக ‘ஜப்பான்’ படத்தில் நடித்துள்ளார்.
ராஜு முருகன் இயக்கி உள்ள இப்படத்துக்கு இசையமைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். ஓரிரு நாள்களில் திரைகாண உள்ளது.
இந்நிலையில், எண்ணிக்கைக்காக தாம் படங்களில் நடிப்பதில்லை என பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் அனு.
மனதுக்குப் பிடித்தமான, நல்ல கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிப்பதாகச் சொல்கிறார்.
“திரையுலகில் உள்ள அனைத்து கலைஞர் களுமே இப்படித்தான் சொல்வார்கள். நானும் அதற்கு விதிவிலக்கல்ல. எனினும் எத்தனை பேர் இந்த கொள்கையில் நீண்ட நாள்கள் நிலைத்து நிற்பார்கள் என்பதுதான் கேள்வி.
“தரமான படைப்பாக உருவாகி உள்ளது ‘ஜப்பான்’ படம். இதில் நடிக்க ஒப்பந்தமாவதற்கு முன்பே இயக்குநர் ராஜு முருகனின் படங்களைப் பார்த்துள்ளேன்.
“பொதுவாக அவர் படங்களில் நாயகிகளுக்கு நல்ல முக்கியத்துவம் இருக்கும். அதனால் அவரது படைப்புகளை ரசித்துப் பார்ப்பேன். இந்தக் காரணத்துக்காகத்தான் ‘ஜப்பான்’ படத்தில் நடிக்கவும் தயக்கமின்றி ஒப்புக்கொண்டேன்.
“கார்த்தியைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். தாம் தேர்ந் தெடுத்த கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் தேவையான உழைப்பை வழங்கக் கூடியவர்.
“தவிர, இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் பெரியது என்பதாலும் நடிக்க ஒப்புக் கொண்டேன்,” என்கிறார் அனு இம்மானுவேல்.
‘ஜப்பான்’ படத்தில் இவரது கதாபாத்திரம் வழக்கமான கதாநாயகியைப் போன்று இருக்காதாம். கதைப்படி இவரும் கார்த்தியும் காதலர்கள் என்றாலும், இருவருக்கும் இடையேயான காதல் வழக்க மானதாக இருக்காதாம்.
“இந்தப் படத்தில் நாயகன், நாயகி இடையேயான காதல் வேறு கோணத்தில் சொல்லப்பட்டிருக்கும். என்னைச் சுற்றித்தான் கதை நடக்கிறது.
“கார்த்தியுடன் நடித்தது நல்ல அனுபவம், அமைதியானவர், தனது வேலையில் சரியாக இருப்பார். சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வருவார். சினிமாவின் எல்லா துறைகள் பற்றியும் தெரிந்து வைத்திருக்கிறார். ‘ஜப்பான்’ படம் தமிழில் எனக்கு நல்ல திருப்பம் தரும் என்பது வெறும் எதிர்பார்ப்பல்ல. என்னுடைய தீவிரமான நம்பிக்கை. இனி அடிக்கடி என்னை தமிழ்ப் படங்களில் பார்க்கலாம்,” என்கிறார் அனு இம்மானுவேல்.
‘ஜப்பான்’ படத்துக்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.ஆர்.பிரபு ‘ட்ரீம் வாரியர் பிச்சர்ஸ்’ சார்பில் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படம் தாம் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக உருவாகி உள்ளது என்கிறார் கார்த்தி.
“அண்மையில் திரு.ரஜினியை நேரில் சந்தித்தேன். அப்போது ‘பருத்தி வீரன்’ போன்ற கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்குமாறு அறிவுறுத்தினார்.
“அதுபோன்ற கதாபாத்திரத்துக்கும் கதைக்கும் நான் எங்கே போவது என்று அவரிடமே திருப்பிக் கேட்டேன்.
“இப்போது ‘ஜப்பான்’ படத்தில் எனது கதாபாத்திரத்தை மேலோட்டமாக கவனிக்கும்போது அதே போன்ற நக்கல் கதாபாத்திரத்தைப் போல் உள்ளது.
“என்னை வாரிசு நடிகர் என்று குறிப்பிடுவதை ஏற்க முடியாது. ஏனென்றால் சினிமாவே வேண்டாம் என்றுதான் அப்பா சொல்லி வந்தார். எனினும், இதுவரை கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது நான் சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக உணர்கிறேன்,” என்கிறார் கார்த்தி.