ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் கோகுல் இயக்கத்தில் உருவாகி உள்ளது ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம்.
முடி திருத்தும் ஒரு தொழிலாளியின் கதையை மையமாக வைத்து உருவாகி உள்ளது இப்படம்.
எந்தக் குழந்தையிடமும், ‘சிறு வயதில் நீ என்னவாகப் போகிறாய்’ என்று கேட்டால் மருத்துவர் ஆவேன், காவல்துறை அதிகாரியாக விருப்பம் என்று பலவிதமான பதில்கள் வரும். ‘சூப்பர்மேன்’, ‘பேட்மேன்’ என்றும் கூறுவதுண்டு. ஆனால், எதிர்காலம் அந்த குழந்தைகளுக்கு வேறு வழியைக் காட்டிவிடும்.
“அவ்வாறு இல்லாமல் சிறு வயதில் இருந்தே சிகையலங்கார நிபுணராக உருவாக வேண்டும் என்று நினைக்கும் ஓர் இளையரின் கதை இது. ஒரு சிலர் இந்த தொழிலை சாதாரணமாக நினைக்கக் கூடும். வருமானம் குறைவு என்றுகூட கருதலாம். ஆனால் உண்மை நிலை வேறு.
“சென்னையில் இருந்து மும்பைக்கு விமானத்தில் சென்று சிகை அலங்காரம் செய்துகொண்டு திரும்புகிறவர்களை எனக்குத் தெரியும். இந்த தகவல் பலருக்குத் தெரியாது.
“எந்தத் தொழிலை நேசித்தாலும், அது நமக்கென்று ஒன்றைத் தரும், அதை இந்தப் படத்தைக் காணும் ரசிகர்களால் புரிந்துகொள்ள முடியும்,” என்கிறார் இயக்குநர் கோகுல்.
இதற்கு முன்பு ஜீவாவை வைத்து ‘ரௌத்திரம்’, விஜய் சேதுபதி நடித்த ‘சுமார் மூஞ்சி குமார்’, கார்த்தியை வைத்து ‘காஷ்மோரா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அனுபவம் உள்ளவர். இப்போது ஆர்.ஜே.பாலாஜியுடன் கூட்டணி அமைத்துள்ளார்.
“கதிர் எனும் இளையர் சிகை அலங்கார நிபுணராக வேலை பார்க்கிறார். இந்தத் தொழில் மூலம் அந்த இளைஞன் சந்திக்கும் சில நபர்கள் அவரது வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகின்றனர். வாழ்க்கை அவனை எப்படி வழிநடத்துகிறது என்கிற கோணத்தில் கதை நகரும்.
“முழு படத்தையும் பார்த்து முடிக்கும்போது ஒரு இளைஞனின் வாழ்க்கையை முழுமையாக பார்த்த மனநிறைவு ஏற்படும்,” என்று இயக்குநர் தரப்பு இப்போதே உத்தரவாதம் அளிக்கிறது. இதில் வழக்கமான ஆர்.ஜே.பாலாஜியைப் பார்க்க இயலாது என்றும் சொல்கிறார் கோகுல்.
“என்னுடைய ஒவ்வொரு படத்திலும் நடிக்கும் கதாநாயகனை புது கோணத்தில் காட்டவே முயற்சி செய்து இருக்கிறேன். அந்த வகையில் பாலாஜியையும் இதுவரை பார்த்திராத கோணத்தில் திரையில் சித்தரித்துள்ளேன்.
“கூடவே சத்யராஜும் இருக்கிறார். நிச்சயமாக இருவரும் தந்தை, மகன் பாத்திரங்களில் நடிக்கவில்லை. சத்யராஜ் என்ற அற்புதமான நடிகரிடம் பல ஆண்டுகால அனுபவம் உள்ளது. அது எவ்வளவு முக்கியமான அம்சம் என்று இணைந்து பணியாற்றும்போதுதான் தெரிகிறது. அவரைப் பொறுத்தவரை நம் மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும். அதைச் சாதித்துவிட்டால் போதும், தன்னை முழுமையாக நம்மிடம் ஒப்படைத்து விடுவார்.
“கதையின் நாயகியாக மீனா சௌத்திரி. இவர் கதைக்கேற்ப அருமையாக நடித்துள்ளார். தமிழ் மொழி இன்னும் அவருக்குக் கைகூடவில்லை. இருப்பினும் காட்சிகளின் தன்மையை, வசனங்களின் முக்கியத்துவத்தை நன்கு பாடுபட்டு புரிந்துகொண்டுள்ளார். அதன் பிறகு அவர் வெளிப்டுத்தும் நடிப்பு மிகச் சிறப்பானதாக இருந்தது,” என்று பாராட்டுகிறார் இயக்குநர் கோகுல்.
இப்படத்திற்கு விவேக் மெர்வின் நான்கு பாடல்களை எழுதியுள்ளார். லோகேஷ் கனகராஜ் சிறு கதாபாத்திரத்தில் வந்து போகிறார். கோகுலும் லோகேஷும் நல்ல நண்பர்களாம்.
“படப்பிடிப்பின்போது லோகேஷைப் பார்த்தபோது என்னைச் சந்திக்க வந்திருப்பதாக நினைத்துவிட்டார் பாலாஜி. பிறகு அவர் நடிக்க வந்ததாக தெரிவித்தபோது பாலாஜிக்கு ஒரே வியப்பு.
“இதேபோல் பத்து நிமிடங்கள் மட்டும் வரக்கூடிய மற்றொரு சிறு வேடத்தில் இன்னொரு பிரபலம் நடித்துள்ளார். அவர் யார் என்பதை இப்போது சொல்வதற்கு இல்லை. ஆனால் விவரம் தெரியும்போது ரசிகர்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவார்கள்,” என்கிறார் இயக்குநர் கோகுல்.