ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகி உள்ளது ‘சைரன்’ திரைப்படம். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
நீண்ட நாள் சிறைவாசம் அனுபவிக்கும் 45 வயது சிறைக்கைதி கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி வாழ்ந்து காட்டியுள்ளதாகச் சொல்கிறார் இப்படத்தின் இயக்குநர் அந்தோணி பாக்யராஜ்.
கீர்த்தி சுரேஷ் காவல்துறை அதிகாரியாகத் திரையில் மிடுக்கு காட்டுவாராம்.
“கீர்த்தி சுரேஷின் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே சில காட்சிகளைச் சேர்த்திருக்கிறோம். அந்தக் காட்சிகள் அவரது நடிப்பால் அருமையாக உருவாகி உள்ளன.
“ஓர் இயக்குநராக எத்தகைய உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறேனோ அதைப் புரிந்துகொண்டு கச்சிதமாகச் செயல்பட்டுள்ளார்.
“அவரது கதாபாத்திரம் இந்தப் படத்திற்கு மிக முக்கியமானது, வலுவானது,” என்று எடுத்த எடுப்பிலேயே கீர்த்தியைப் பாராட்டித் தள்ளுகிறார் இயக்குநர் அந்தோணி பாக்யராஜ்.
இவர் இதற்கு முன்பு ‘விசுவாசம்’, ‘இரும்புத் திரை’ படங்களின் எழுத்தாளர் என்பது தீவிர சினிமா ரசிகர்களுக்குத் தெரிந்திருக்கும்.
கீர்த்தியைப் போல் மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அனுபமா பரமேஸ்வரன். படத்தின் உணர்வுபூர்வமான காட்சிகளைத் தாங்கிப் பிடிக்கும் கதாபாத்திரமாம். கொடுத்த வேலையை பிரமாதமாக கையாண்டு இருப்பதாக அனுபமாவுக்கும் இயக்குநரின் பாராட்டு கிடைக்கிறது.
“45 வயதான ஆடவர் வேடத்தில் ஜெயம் ரவி மிகவும் மெனக்கெட்டு நடித்துள்ளார். சந்தர்ப்ப சூழ்நிலையால் 12 ஆண்டுகள் தொடர்ந்து சிறையிலேயே கழித்துவிட்ட கதாநாயகனுக்கு நான்கு நாள்கள் சிறை விடுப்பு கிடைக்கிறது.
“அதன் மூலம் வெளியே வரும் அவர் என்ன செய்கிறார், எதற்காக சிறையில் அடைக்கப்பட்டார் என்று எழக்கூடிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக நகரும். வாழ்க்கை ஒருவரைப் பல விதங்களில், பல இடங்களுக்கு அழைத்துச் செல்லும். அது குறித்தும் இந்த படம் அலசும்.
“கதையைக் கேட்டது முதல் 45 வயது மனிதருக்கு உரிய உடல் மொழி, வசன உச்சரிப்பு, தோற்றம் என அனைத்திலும் தீவிர கவனம் செலுத்தினார் ரவி.
“இயக்குநராக போதிய அனுபவம் இல்லாத என்னை நம்பி தம்மை முழுமையாக ஒப்படைத்தார் அவர். முப்பது படங்களில் நடித்த அனுபவசாலியைக் கையாள்கிறோம் என்ற பதற்றம் எனக்குள் இருந்தது,” என்கிறார் அந்தோணி பாக்யராஜ்.
இதில் சமுத்திரகனியும் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். தற்போது பல படங்களில் நடித்து வரும் அவரை நேரில் சந்திக்க முடியவில்லையாம். அதனால் தொலைபேசியிலேயே கதையை விவரித்துள்ளார்.
அருமையான கதை என்று பாராட்டிய அவர், முதல் படம் என்பதால் எது குறித்தும் கவலைப்படாமல் பக்குவமாகச் செயல்படுமாறு ஆலோசனை வழங்கினாராம்.
“பெரிய படத் தயாரிப்பு நிறுவனம், ஜெயம் ரவி போன்ற பெரிய நடிகர், குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய கதை என எல்லாம் அமைந்துள்ளது.
“சில சவால்களையும் எதிர்கொண்டோம். கதை எழுதும்போது சவால்கள் இருப்பது புரியாது. ஆனால் படமாக்கும்போதுதான் சிரமப்பட வேண்டும் எனத் தெரிந்தது.
“சைரன் என்றதும் ஆம்புலன்ஸ் வாகனம், தீயணைப்பு வண்டி என ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு நினைவுகள் வரக்கூடும். ஆனால், நீங்கள் எதிர்பாராத ஒன்று இப்படத்தில் இருக்கும்.
“தலைப்புக்கு விளக்கம் அளித்தால் முழுக் கதையையும் சொல்லியது போல் ஆகிவிடும். எனவே, திரையரங்கில் பார்த்து ரசியுங்கள்,” என்கிறார் அந்தோணி பாக்யராஜ்.