கீர்த்தி சுரேஷ் திரை உலகில் கால்பதித்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இதையடுத்து ரசிகர்களுக்கும் தனது நலன் விரும்பிகளுக்கும் நன்றி தெரிவித்து ஒரு காணொளியை அவர் வெளியிட்டுள்ளார்.
பத்து ஆண்டுகளை நிறைவு செய்திருந்தாலும் ஏதோ இப்போது தான் திரைப்பயணத்தை துவங்கியது போல் இருக்கிறது என்றும் இதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் கீர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
“என்னுடைய அப்பா, அம்மாவுக்கு நன்றி. அவர்கள் இல்லை என்றால் நான் இந்த இடத்தில் இருந்திருக்க மாட்டேன்.
“என்னுடைய குரு பிரியதர்ஷனுக்கு நான் என்றைக்கும் கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய திரை உலகப் பயணம் தொடங்குவதற்கு அவர்தான் காரணம். இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது.
“என்னுடைய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், சக நடிகர்கள், ஊடக நண்பர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் மிகப் பெரிய நன்றி. அது மட்டும் இல்லாமல் என்னை விமர்சனம் செய்தவர்களுக்கும் நன்றி. அவர்களுடைய விமர்சனங்களும் என்னுடைய வளர்ச்சிக்கு உதவுகிறது,” என்று தெரிவித்துள்ளார் கீர்த்தி.
இவரது நடிப்பில் அடுத்து ‘ரிவால்வர் ரீட்டா’, ‘சைரன்’, ‘ரகுதாத்தா’ உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கின்றன. ‘சைரன்’ படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார் என்பதும் கீர்த்தி சுரேஷ் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதாபாத்திரங்கள் அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. அதனால்தான் இடையில் சில காலம் வணிக அம்சங்கள் நிறைந்த படங்களில் நடிக்க முடிவு செய்தேன்.
“அதேசமயம் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தை வைத்து, ஏதாவது வித்தியாசமாக செய்து ரசிகர்களைக் கவர வேண்டும் என்பதே எனது புதிய திட்டம். இதைச் செயல்படுத்தினால் ரசிகர்கள் நிச்சயம் வரவேற்பர்,” என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
இந்தக் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் ரசிகர்களால் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.