தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் முதல் பாடலான ‘கில்லர் கில்லர்’ வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.
‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ‘கேப்டன் மில்லர்’.
பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதையாக உருவாகும் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடித்துள்ளார்.
சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கேன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் மூன்று பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கடந்த ஆறு மாதங்களாக இப்படத்தில் நடித்து வந்த அவருக்கான படப்பிடிப்பு ஜூலை 19ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் முதல் பாடலான ‘கில்லர் கில்லர்’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இதன் பாடல் வரிகளை கேபர் வாசுகி எழுத, தனுஷ் பாடியுள்ளார்.
கோபத்தின் உச்சியில் எதிரிகளை அடித்து துவம்சம் செய்யும் பாடலாக உருவாகியுள்ளது. குறிப்பாக “நீ தனியா வந்தா தல மட்டும் உருளும், நீ படையா வந்தா சவ மலை குவியும். நீ நரியா பதுங்க ரோமம் கிழியும். நீ ஓடி வந்தா முட்டி சிதறும், கூடி வந்தா பல்லும் உதிரும். சாடி வந்தா சங்கு பிதுங்கும், பறந்து வந்தா எலும்பு உடையும்,” போன்ற வரிகள் பாட்டிலும் வன்முறைகளா? என கேட்கும் அளவுக்கு வரிகள் உள்ளன. பாடல் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
பொதுவாகவே தனுஷ், ஜிவி கூட்டணி தரமான பல ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளன. அந்த வெற்றி இந்தப்பாடலிலும் தொடர்ந்துள்ளது என்று கூறலாம். மேலும், இந்த லிரிக்கல் வீடியோவில் இடம்பெற்ற சில காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாகவும், கண்டிப்பாக ‘கேப்டன் மில்லர்’ படம் இந்திய அளவில் பேசக்கூடிய படமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் கூறி வருகின்றனர்.
இப்படம் 2024 பொங்கலுக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகின்றன.
ராப் பாடலாக வெளியாகி உள்ள இந்தப் பாடலில் தனுஷ் தனது குரலை வித்தியாசமாக பயன்படுத்தி பாடியுள்ளார்.
தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்பாடல் தற்பொழுது வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படம் பொங்கலுக்கு விருந்தாக திரைக்கு வர உள்ளது.
அதற்குப் போட்டியாகத்தான் தனுஷ் டிசம்பரில் வெளியாக இருந்த படத்தை பொங்கலுக்குத் தள்ளி வைத்திருக்கிறார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.