மன்சூர்அலிகான், திரிஷா விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என தெரிகிறது.
அண்மையில் திரிஷா குறித்து சர்ச்சைக்கு உரிய கருத்துகளை தெரிவித்து, அதன் காரணமாக பலத்த கண்டனத்துக்கும் காவல்துறை விசாரணைக்கும் ஆளானார் மன்சூர்அலிகான்.
அதற்காக பின்னர் மன்னிப்பு கோரினார். அவரை மன்னித்து விட்டதாக திரிஷாவும் அறிவித்தார்.
இந்நிலையில் மன்சூர்அலிகான் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக திரிஷாவிடம் விளக்கம் கேட்டு காவல்துறை கடிதம் அனுப்பியது.
அதற்கு தற்போது பதில் அளித்துள்ளார் திரிஷா. மன்சூர்அலிகான் மன்னிப்பு கேட்டுவிட்ட நிலையில் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என திரிஷா கேட்டுக் கொண்டதாக ஊடகத்தகவல் தெரிவிக்கிறது.
திரையுலகைச் சேர்ந்த சில நெருக்கமான நண்பர்கள் தெரிவித்த ஆலோசனையின் பேரிலேயே திரிஷா காவல்துறையிடம் இவ்வாறு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
பொன்னியின் செல்வன், லியோ படங்களின் வெற்றிக்குப் பிறகு திரிஷாவுக்குப் புதுப்பட வாய்ப்புகள் தேடி வருகின்றன. இந்த நேரத்தில் தேவையின்றி திரையுலகில் யாரையும் பகைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லையாம்.
இதற்கிடையே, தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் திரிஷாவை ஒப்பந்தம் செய்வதில் சில இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் விரும்புகின்றனர். அதனால் கூடுதல் மகிழ்ச்சியில் உள்ளார் திரிஷா.
இவரது நடிப்பில் தற்போது இரண்டு புதுப் படங்கள் உருவாகி வருகின்றன. இரண்டு படங்கள் வெளியீடு காண தயாராக உள்ளன.