ஜி.வி.பிரகாஷ்குமார் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பதினேழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. நூறு படங்களுக்கு இசையமைத்தவர், பின்னர் திடீரென்று நடிகராக அவதாரம் எடுத்து 25 படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இப்போது அனுராக் காஷ்யப் இயக்கும் இந்திப் படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு அளித்துள்ளாராம். இது, தனது திரையுலகப் பயணத்தில் மிகப்பெரும் திருப்பமாக அமையும் என நம்புவதாகச் சொல்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
“கடந்த 2005ஆம் ஆண்டு ஒருவித வேட்கையோடு திரையுலகுக்கு வந்தேன். அந்த வேட்கைதான் இன்னமும் என்னை இயங்க வைக்கிறது. ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் முதல் படத்தில் நடிக்கும் உணர்வுதான் இருக்கிறது.
“திரையுலகில் என்னுடைய தேடல் இன்னும் குறையவே இல்லை. சினிமாவிற்குள் நுழையும்போது ஒரு சின்னப் பையனா என்னென்ன கனவுகள் கண்டேனோ, அவை எல்லாம் இன்னும் எனக்குள் இருக்கிறது. அவற்றை நோக்கித்தான் எனது பயணம் இருக்கிறது,” என்று பிரபல விகடன் ஊடகம் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு நிகழ்வின்போது கூறியுள்ளார் ஜி.பி.பிரகாஷ்.
சிறு வயதில் இசை குறித்து எந்தவிதமான யோசனையும் தமக்கு இல்லை என்றும் குறிப்பிட்ட அவர், பள்ளியில் படித்தபோது ஒரு போட்டியில் பங்கேற்று சிறந்த ‘கீ போர்ட்’ கலைஞராக தேர்வு செய்யப்பட்ட பிறகே இசை மீதான ஆர்வம் வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
“அந்த இசை நிகழ்ச்சிக்காக நாங்கள் பயிற்சி மேற்கொண்டது, எனது வயதையொட்டிய சிறுவர்களுடன் இசை தொடர்பாகப் பேசியது ஆகியவைதான் இசை மீதான பெரிய ஈர்ப்பை மனதில் ஏற்படுத்தியது என்பேன். அதன் பிறகுதான் இசை எனது பாதை என முடிவு செய்தேன்.
“அதேபோல் நடிகனாக வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லை. ஒரு சமயம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். ஆனால், அந்தப் படம் உருவாகவில்லை.
“எனினும் நான் நடிக்கப் போவதாக செய்தி வெளியானதால், அதை வைத்து மற்ற பட வாய்ப்புகள் தேடிவந்தன. நடிப்பதை ஜாலியான அனுபவமாகக் கருதி நகைச்சுவைப் படங்களில் நடிக்கத் தொடங்கினேன். நான்கைந்து படங்கள் வெளியாவதற்குள் நடிப்பதற்காக கொஞ்சம்கூட மெனக்கெடவில்லை என்று சில விமர்சனங்கள் எழுந்தன.
“அப்போதுதான் இயக்குநர் பாலாவின் ‘நாச்சியார்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர்தான் நடிகனாக ஒரு கதாபாத்திரத்தை எவ்வாறு பார்க்க வேண்டும், எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். அதன் பிறகு ராஜீவ் மேனன் இயக்கத்தில் ‘சர்வம் தாள மயம்’, சசி இயக்கத்தில் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’, வசந்த பாலனின் ‘ஜெயில்’ என்று பல முக்கியமான இயக்குநர்களின் படங்களில் நடித்தபோதுதான் நடிப்பை கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்ள முடிந்தது.
“ஒரு ரசிகனாக இருந்து அனுராக் காஷ்யப் படத்துக்கு இசையமைத்த நிலை மாறி, இப்போது அவரது இயக்கத்தில் நடிக்கப் போவதை நினைத்தால் வியப்பாக உள்ளது. இது இந்தியா முழுவதும் உள்ள அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்குமான படமாக இருக்கும்.
“இளையராஜாவிடம் நான் அதிகம் பேசியதில்லை. அவரது இசையில் ‘நாச்சியார்’ படத்தில் ஒரு பாடல் பாடினேன். அந்தப் படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் பாலாவிடம், ‘அந்தப் பையன் நன்றாக நடித்துள்ளான். இதை அவனிடம் சொல்லிவிடு’ என்றாராம்.
“இதேபோல் ‘சர்வம் தாளமயம்’ படத்தைப் பார்த்துவிட்டு, ஏ.ஆர்.ரகுமானும் நான் கதாபாத்திரத்துக்கு ஏற்ப நடித்திருப்பதாகவும் எந்த இடத்திலும் ஜிவியைப் பார்க்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார். இருவருடனும் பணியாற்றியதை பாக்கியமாகக் கருதுகிறேன்,” என்று ஜி.வி.பிரகாஷ் மேலும் கூறியுள்ளார்.