தனுஷ் நடிக்கும் ஐம்பதாவது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். இதையடுத்து அவரது 51வது படத்தைத் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்குவது உறுதியாகி உள்ளது.
இதில், ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பே இப்படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கி விட்டனவாம். இது அரசியல் மாஃபியா கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகும் படம்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மும்பையில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் முதற்கட்டமாக சண்டைக்காட்சிகள் படமாக்கப்படும் என்றும் தெரிகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மும்மொழிகளில் இப்படத்தை உருவாக்க இயக்குநர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, படங்களை இயக்குவதிலும் தனுஷ் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.
விரைவில் தனது மூத்த சகோதரியின் மகனை வைத்து ஒரு படத்தை இயக்கப்போகிறாராம். அதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.