பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ளது ‘சலார்’ திரைப்படம். எதிர்வரும் 22ஆம் தேதி வெளியீடு காண உள்ளது.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்காக ஐந்து மொழிகளில் பின்னணிக் குரல் (டப்பிங்) கொடுத்து இருப்பதாகச் சொல்கிறார் பிருத்விராஜ்.
இத்தகைய வாய்ப்பை தாம் பெரும் பாக்கியமாக கருதுவதாகவும் ஒரே படத்திற்காக ஐந்து மொழிகளில் பின்னணிக் குரல் கொடுத்து இருப்பது இதுவே முதல்முறை என்றும் அவர் கூறியுள்ளார்.
“இத்தனை ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் நான் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களுக்கும் நானே பின்னணி குரல் கொடுத்து வந்துள்ளேன். இதன் மூலம் அந்த கதாபாத்திரங்களுக்கு வலுசேர்த்து இருப்பதாக கருதுகிறேன்.
“தற்போது ‘சலாம்’ படத்திற்காக தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் பின்னணி குரல் கொடுத்து இருப்பது புது அனுபவம். ஒரே கதாபாத்திரத்திற்கு ஐந்து மொழிகளில் குரல் கொடுப்பது மிகவும் சவாலானது எனப் பலர் என்னைப் பாராட்டுகிறார்கள்,” என்று பிருத்விராஜ் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இவரைப் போலவே இப்படத்தின் கதாநாயகியான ஷ்ருதிஹாசனும் ஐந்து மொழிகளில் பின்னணி பேசி உள்ளார்.
பிரசாந்த் நீல் இயக்கியுள்ள ‘சலார்’ படத்தில் பிரபாஸ் நாயகனாவும் ஷ்ருதி நாயகியாகவும் நடித்துள்ளனர். பிருத்திவிராஜ் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.
அடுத்த சில நாள்களில் இப்படம் வெளியீடு காண உள்ளது. இந்நிலையில் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களான தேவா, வரதா ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு, இருவரும் 22ஆம் தேதி ரசிகர்களைச் சந்திக்க வருவதாக பிருத்திவிராஜ் குறிப்பிட்டுள்ளார்.