‘ஈரம்’ படத்தில் தண்ணீரில் இருந்து பேய் உருவாகும். ‘சப்தம்’ படத்தில் சத்தத்தில் இருந்து பேய் உருவாகும் என்று கூறியிருக்கிறார் இயக்குநர் அறிவழகன்.
ஆதியுடன் நந்தா நடித்த ‘ஈரம்’, நகுல் நடித்த ‘வல்லினம்’, அருள்நிதி நடித்த ‘ஆறாது சினம்’, அருண் விஜய் நடித்த ‘குற்றம் 23’, ‘பார்டர்’ ஆகிய திரைப்படங்களையும் அருண் விஜய் நடித்த ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற இணையத் தொடரையும் இயக்கியவர், அறிவழகன்.
தற்போது அவர் மீண்டும் ஆதி, இசை அமைப்பாளர் தமன் ஆகியோருடன் இணைந்துள்ள படம், ‘சப்தம்’.
இப்படத்தின் முதல் சுவரொட்டியை அண்மையில் ஆதியின் பிறந்தநாளையொட்டி வெளியிட்டனர். படம் குறித்து இயக்குநர் அறிவழகன் பேசியபோது, “ஈரம்’, ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து 4வது முறையாக நானும், தமனும் இணைந்துள்ளோம். ஆதிக்கு மனைவியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார்.
“மூணாறு, மும்பை மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. வரும் பிப்ரவரி மாதம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் இதே பெயரில் படத்தை திரையிடுகிறோம்.
பேய் புலனாய்வாளர் கதாபாத்திரத்தில் ஆதி நடித்துள்ளார். இவ்வுலகில் ஆவி இருக்கிறதா, இல்லையா என்பதை அறிவியல் ரீதியாக அணுகும் கதை இது,” என்றார் அறிவழகன்.