‘பிக் பாஸ் 7’ நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் பூர்ணிமா ரவி நடித்த ‘செவப்பி’ படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
‘பிளான் பண்ணி பண்ணனும்’, ‘சோட்டா’ படங்களில் நடித்தவர் பூர்ணிமா ரவி. இவர் அண்மையில் வெளிவந்த ‘அன்னபூரணி’ படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் பூர்ணிமா நடித்த ‘செவப்பி’ என்ற படம் ‘ஆஹா’ என்ற ஓடிடி தளத்தில் வருகிற ஜனவரி 12ஆம் தேதி நேரடியாக வெளியாகிறது.
படம் பற்றி இயக்குநர் எம்.எஸ்.ராஜா கூறியபோது, “1990களில் தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் ஓர் ஐந்து வயது சிறுவனைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள்தான் கதை.
“அச்சிறுவன் ஒரு கோழியை நேசத்தோடு வளர்க்கிறான். தந்தை தன் குழந்தைகள் மீது காட்டும் அதீத அன்பைப்போல அந்தக் கோழியை பாதுகாப்போடும் நேசத்தோடும் அச்சிறுவன் வளர்க்கிறான்.
“இந்நிலையில் இரு தரப்பினர்கள் ஒன்றாக ஒற்றுமையாக சேர்ந்து வாழும் அந்த கிராமம் இரண்டாகப் பிரிந்து மோதிக்கொள்கிறது. அதனால் கோழியும் சிறுவனும் பிரிய நேரிடுகிறது.
“இறுதியில் அந்தச் சிறுவனும் கோழியும் ஒன்று சேர்ந்தார்களா? கிராம மக்கள் ஒன்று சேர்ந்தார்களா? என்பதுதான் கதை.
“கேரளாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள மத்திபாளையம் என்ற கிராமத்தில் முழு கதையையும் வெறும் 27 நாட்களில் படமாக்கினோம்,” என்றார்.