‘விடாமுயற்சி’ கதை தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், விரைவில் அஸர்பைஜான் நாட்டில் நடைபெறும் படப்பிடிப்பில் திரிஷாவும் ரெஜினாவும் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
கதைப்படி, அஜித்தும் திரிஷாவும் கணவன், மனைவியாக நடிக்கின்றனர். இருவரும் வெளிநாட்டிற்குச் செல்கிறார்கள். அப்போது வில்லன் கூட்டம் திரிஷாவை கடத்திச் செல்கிறது.
திடீரென ஒரு பிரச்சினையை ஏற்படுத்தி அஜித்தின் கவனத்தை திசை திருப்புமாம் வில்லன் தரப்பு.
அவர் அசந்துள்ள தருணத்தில் திரிஷா கடத்தப்படுவாராம். மனைவியைத் தேடி அங்கும் இங்குமாக அலைந்து திரிவார் அஜித்.
வில்லன் கூட்டம் பற்றிய ஒரு முக்கிய தகவல் கிடைக்க, ஒரு கட்டத்தில் அவர் நேருக்கு நேர் மோதுகிறார். இறுதியில் அவர் தன் மனைவியை உயிரோடு மீட்கிறாரா என்பதுதான் கதை என்று ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
அஜித், இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி அஸர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.
பொதுவாக மகிழ் திருமேனி படம் என்றால் அதில் பல்வேறு நுணுக்கமான விவரங்கள் நிறைந்திருக்கும். ஒரு பிரச்சினை, அது குறித்த விசாரணை, அப்போது ஏற்படும் அடிதடிகள், பின்னர் அதிரடித் திருப்பங்கள் என்கிற ரீதியில்தான் கதை நகரும். ‘விடாமுயற்சி’யும் இப்படிப்பட்ட கோணத்தில்தான் உருவாக்கப்படுவதாகத் தெரிகிறது.
பொதுவாக அஜித் எந்தக் காட்சியாக இருந்தாலும் ஒருமுறை மட்டுமே நடிப்பார் என்றும் இரண்டு, மூன்று முறை படமாக்கப்படுவதை அவர் விரும்பமாட்டார் என்றும் கூறப்படுவதுண்டு. ஆனால் ‘விடாமுயற்சி’ படத்தின் சில முக்கியமான காட்சிகளில் இரண்டு, மூன்று முறை அவர் நடித்தாராம்.
இது குறித்து மகிழ் திருமேனி அவரிடன் கேட்கத்தயங்க, அவரது மன உணர்வைப் புரிந்துகொண்டு அஜித் தாமாக முன்வந்து, ‘மீண்டும் ஒரு முறை படமாக்கலாமே’ என்று கேட்டு நடித்துக் கொடுத்தாராம்.