நடிகை பிரியாமணி ‘மைதான்’ பட விழாவில் கலந்துகொண்டபோது, அவரை மறைந்த ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் தகாதமுறையில் தொட்டு அவருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக வலைத்தளவாசிகள் குறை கூறி வருகின்றனர்.
நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மைதான்’ திரைப்படம் நோன்புப் பெருநாளை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை இயக்குநர் அமித் சர்மா இயக்கி இருந்தார்.
இந்தியாவைச் சேர்ந்த காற்பந்து பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு இருக்கும் இப்படத்தில், அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக முதலில் நடிகை கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க இருந்த நிலையில், அவரது தோற்றம் இப்படத்திற்குப் பொருத்தப்பட்டு வராததால் அவருக்குப் பதிலாக பிரியாமணி தேர்வு செய்யப்பட்டார்.
மிகப்பிரமாண்ட செலவில் உருவாகியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற இப்படத்தின் முன்னோட்ட படவெளியீட்டு நிகழ்ச்சியில் அஜய் தேவ்கன், பிரியாமணி, போனி கபூர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அங்குவந்த தயாரிப்பாளர் போனி கபூர், நடிகை பிரியாமணியுடன் இணைந்து ஊடகங்களுக்கு காட்சி அளித்தார். அப்போது பிரியாமணியின் அனுமதியின்றி அவரைத் தொட்டு அணைத்தபடி போனி கபூர் இருந்ததாக சமூக ஊடகங்களில் இணையவாசிகள் குறைகூறி வருகின்றனர்.
இதுகுறித்த காணொளியும் வெளியாகி உள்ள நிலையில், அதில் பிரியாமணி அசௌகரியமாக உணர்வதைப் பார்க்கமுடிவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
68 வயதில் இதெல்லாம் தேவையா? என இணையவாசிகள் சிலர் நேரடியாகவே போனி கபூரை கடிந்துகொண்டுள்ளனர்.