நடிகர் விஜய் ஆண்டனி விஜய்யின் அரசியல் வருகை குறித்தும் தமிழ்நாட்டின் சாலைகளில் நடைபெறும் ‘ஹேப்பி ஸ்திரீட்’ கலைநிகழ்ச்சிகள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். நாகரிகமாக ஆடை அணிய பெண்களுக்குத் தெரியும், அவர்களுக்கு கற்பிக்கத் தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பேசியுள்ள விஜய் ஆண்டனி, “நடிகர் விஜய் 17 வயதில் திரையுலகில் நடிக்க ஆரம்பித்து நீண்டகால உழைப்பிற்குப் பின்னர் இப்போதுதான் உச்சம் தொட்டிருக்கிறார்.
“தன்னிடம் அன்பு காட்டிய மக்களுக்குத் தானும் அன்பு காட்டவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என நினைக்கிறார். அது வரவேற்கத்தக்கதுதான்.
“அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். விஜய்க்காக மட்டும் நான் குரல் கொடுக்கவில்லை.
திருமாவளவன், விஜய், ஸ்டாலின் என அனைவருக்கும் குரல் கொடுக்கிறேன்.
“யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வாருங்கள். ஆனால், மக்களுக்கு நல்லது செய்யுங்கள். இதுதான் இன்றைய முக்கிய தேவை,” என்று விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.
இசைக் கச்சேரிகளைத் தொடர்ந்து நடத்திவரும் விஜய் ஆண்டனியிடம் வெளிநாடுகளில் நடத்தப்படுவதுபோல தமிழ்நாட்டிலும் சாலைகளில் நடத்தப்பட்டு வரும் ‘ஹேப்பி ஸ்திரீட்’ கலைநிகழ்ச்சிகள் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
“முன்பெல்லாம் கழைக்கூத்துக் கலைஞர்கள் மூங்கில் கம்புகள் இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து வித்தை காட்டுவர். சிலர் உயிரைப் பணயம் வைத்து மூங்கில் கம்புகளைப் பிடித்துக்கொண்டு கயிற்றில் நடந்தும் தங்களது சாகசத்தை செய்துகாட்டி அசத்துவர்.
“சில கலைஞர்கள் அப்படியே சிலைபோல் உறைந்து நிற்பார்கள். அவர்களை யாராலும் சிரிக்கவைக்கவோ, பேசவைக்கவோ முடியாது. இப்படி தெருக்கூத்து கலைஞர்களின் கலைத்திறன் வெளிப்பாடு பலவிதமாக உள்ளது. இதேபோல் இப்போது சாலைகளில் ‘ஹேப்பி ஸ்திரீட்’ கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
“இதன்மூலம் திறன்பெற்ற கலைஞர்கள் தங்கள் கலைத் திறனை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
“இது அரசின் அனுமதியுடன் இந்தியாவின் பல மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது.
இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரவேற்கின்றனர்.
“ஆனால் ஒரு சிலர், ஆண்களும் பெண்களும் சேர்ந்து சாலைகளில் நடனமாடுவதும் நவீன ஆடைகளில் பெண்கள் பங்கேற்பதும் கலாசார சீரழிவு என விமர்சித்து வருகின்றனர்.
“அவ்வகையில் தமிழ் சினிமா நடிகர் ரஞ்சித் இந்த ‘ஹேப்பி ஸ்திரீட்’ கலைநிகழ்ச்சியைக் கலாசார சீரழிவு என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
“பணம் இருப்பவர்கள், வசதியானவர்கள் பெரிய பெரிய மேடைகளில், கலை அரங்குகளில் கலைநிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள்.
ஏழை எளிய, பணம் இல்லாத மக்கள் சாலைகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகள் மூலம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள். இதில் தவறு ஏதுமில்லை.
இந்த நிகழ்வுகளில் பெண்கள் அரைகுறையாக ஆடை அணிவதாக விமர்சிக்கிறார்கள். ஏதோ ஒரு சில பெண்கள் செய்வதை வைத்து ஒட்டுமொத்த பெண்கள் சமூகத்தையும் தவறாகப் பேச முடியாது. பெண்கள் எந்த உடையை அணிய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். அதை அவர்களே தீர்மானித்துக் கொள்வார்கள்,” என்று கூறியுள்ளார்.
இதனிடையே, இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி நடிப்பில் உருவான ‘ரோமியோ’ திரைப்படம் அதிகபட்சமாக 1,200 திரையரங்குகளில் வியாழக்கிழமை (ஏப்ரல் 11) வெளியாகி இருந்தது.
ரோமியோ திரைப்படத்தின் கதை வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் மனைவியை காதலிக்கும் ஒரு தலைக் காதலராக விஜய் ஆண்டனி தனது வித்தியாசமான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
படத்தில் இடம்பெற்றுள்ள நகைச்சுவை காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன. நாயகி மிருணாளினி ரவியின் நடிப்பு அற்புதம் என ஒரு ரசிகர் தனது விமர்சனத்தைப் பகிர்ந்திருந்தார்.
“அறிவழகன் எனும் கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி இதற்கு முன் இல்லாத அளவுக்கு வித்தியாசமாகத் திரையில் தெரிகிறார். அவரது நடிப்பு தான் இப்படத்துக்கு பெரிய பலம். இந்தப்படத்தில் சில குறைகள் உள்ளன.
“ஆனால், அதெல்லாம் பரவாயில்லை. இப்படம் என்னை சிரிக்க வைத்தது, சில இடங்களில் அழவும் வைத்தது,” என மற்றொரு ரசிகரும் டுவிட்டர் பதிவில் படத்திற்கு நேர்மறை விமர்சனத்தைக் கொடுத்துள்ளார்.