இந்திய திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கியவர் வித்யா பாலன். அவர் 2005ஆம் ஆண்டு வெளியான ‘பிரினீதா’ படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன்பின்னர் ‘பா’, ‘கஹானி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தார். இருப்பினும் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘தி டர்ட்டி பிக்சர்’ படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தார்.
இப்படத்துக்குப் பிறகு நாயகியை மையமாகக் கொண்ட திரைப்படங்களில் மட்டுமே வித்யா பாலன் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், வாழ்க்கையில் தனக்கு நடந்த மோசமான நிகழ்வு குறித்து வித்யா பாலன் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
“ நான் கல்லூரி படித்து வந்தபோது ஒருவரை காதலித்தேன். அது என்னுடைய முதல் காதல். காதலர் தினத்தன்று அந்த நபர் என்னிடம் வந்து, முன்னாள் காதலியுடன் வெளியேசெல்லப் போவதாகக் கூறினார். அப்போதே நான் நொறுங்கிவிட்டேன். அதன் பிறகு நாங்கள் பிரிந்து விட்டோம். அது எனக்கு ஒரு நல்ல பாடத்தை தந்தது. வாழ்க்கையில் நான் இப்போது சிறப்பான நிலையில் உள்ளேன்” என்று வித்யா பாலன் கூறினார்.
வித்யா பாலன், சித்தார்த் ராய் கபூர் என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.