சிங்கப்பூரின் போட்டித்தன்மை மிக்க சூழலில் வாழ்வில் முன்னேற கல்வியும் திறன்மேம்பாடும் கட்டாயமாக உள்ளன. குடும்பம், வேலை, வயதின் தளர்ச்சி என பல சவால்கள் இருந்தபோதும் ஏறக்குறைய 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் வகுப்பு களுக்குச் சென்று, பட்டம் பெற்றிருக்கும் ஷீலாவும் நாஸ்நீயும் எந்த வயதிலும் எந்தச் சூழலிலும் படிப்பது சாத்தியம் என்பதை மெய்ப்பித்துள்ளனர்.
பட்டயப் படிப்பை முடித்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு வணிக நிர்வாகத்தில் முதுகலைப் படிப்பை முடித்துள்ளார் 42 வயது ஷீலா நல்லையா.
இம்மாதம் முதல் தேதி நடைபெற்ற கப்லான் (Kaplan) சிங்கப்பூரின் பங்காளித்துவப் பல்கலைக்கழகமான முர்டோக் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற 350 பட்டதாரிகளில் ஒருவர் மூன்று மகள்களுக்குத் தாயான திருமதி ஷீலா.
கடந்த 10 ஆண்டுகளாக சிங்கப்பூர் ஆயுதப் படையில் பணிபுரியும் இவர், திறன் மேம்பாட்டுக்கும் பதவி உயர்வுக்கும் மேற்கல்வி அவசியம் என உணர்ந்தபோது, பணியிடம் அளித்த நிதி ஆதரவைப் பயன்படுத்தி முதுநிலைப் படிப்பில் சேர்ந்தார்.
ஆர்வம் இருந்தபோதும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாடம் படிப்பதும் வகுப்புகளுக்குச் செல்வதும் அவ்வளவு எளிதாக இவருக்கு இருக்கவில்லை. வேலை, குடும்பப் பொறுப்புகளுக்கிடையே வாரத்திற்கு மூன்று நாட்களை படிப்புக்கு ஒதுக்க வேண்டிய கட்டாயம், மிகவும் மாறிவிட்ட கற்றல் நடைமுறைகள், நோய்த்தொற்றுக் காலத்தில் இவரது படிப்பு தொடங்கியதால் மெய்நிகர் வகுப்புகளுக்கு தயார் ஆகவேண்டி இருந்தது என பலவற்றையும் சமாளிக்க வேண்டி இருந்தது.
பலமுறை பாதியிலேயே விட்டுவிடலாம் என தோன்றினாலும் குடும்பத்தினர், குறிப்பாக கணவர் தந்த ஊக்கம் தொடர்ந்து படிக்க வைத்ததாக திருமதி ஷீலா கூறினார்.
கவனச் சிதைவாலும், வாழ்க்கையில் பிடிமானம் இல்லாமல் இருந்ததாலும் 20 வயதில் உள்ளூர் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயில கிடைத்த வாய்ப்பைக் கை நழுவவிட்ட நாஸ்நீ பேகம் முகமது இனாயத்துல்லா, 40 வயதில் இரட்டை முதுநிலைப் பட்டங்களைப் பெற்றுள்ளார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தில் பணிபுரிந்தபோது தகவல் தொழில்நுட்பத்தில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.
அத்துறை சார்ந்த நிபுணத்துவ பட்டயமும், பின்னர் விளம்பரத் துறையில் இளநிலைப் பட்டமும் பெற்ற நாஸ்நீ, சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்பு பல்கலைக்கழகத்தில் திட்ட மேலாளராக சேர்ந்தார். நீண்ட காலமாக வணிக நிர்வாகத்தில் முதுநிலைப் படிப்பை மேற்கொள்ள வேண்டுமென்ற இலக்கை வைத்திருந்த இவர், முர்டோக் பல்கலைக்கழகத்தின் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியலில் நிபுணத்துவ படிப்பிலும், வணிக நிர்வாகத்திலும் இரட்டை முதுநிலைப் படிப்பில் சேர்ந்தார்.
20 ஆண்டுகள் கழித்து மீண்டும் படிக்கத் தொடங்கினார். ஈராண்டுகள் படிப்புக்கு ஒதுக்க வேண்டுமென்றாலும், வேலையையும் பார்த்துக்கொண்டு விடாமுயற்சியைக் கடைப்பிடித்தார்.
மாலை ஆறு மணிவரை வேலை, இரவு பத்து மணிவரை வகுப்புகள் பிறகு நள்ளிரவு இரண்டுவரை படிப்பு என்று ஈராண்டுகள் சிரமமாகவே இருந்தது. எனினும், கணவரின் ஆதரவோடு படித்த நாஸ்நீ அதற்கான வெகுமதியைக் கண்டார்.
“ஈராண்டுகள் படிக்க வேண்டுமென்ற சிறு தயக்கம் தொடக்கத்தில் இருந்தது. நான் என்ன செய்திருந்தாலும் ஈராண்டுகள் எப்படியோ ஓடி இருக்கும். அது பயனுள்ளதாகக் கழிந்தது என்பதோடு, பட்டமும் பெற்றதில் பெருமகிழ்ச்சி,” என்றார்.
தற்போது எண்டர்பிரைஸ் சிங்கப்பூரில் பணிபுரியும் நாஸ்நீ, வாழ்நாள் கற்றல் ஒருவரின் வாழ்வில் மிக முக்கியமானது எனக் கருதுகிறார். பட்டக்கல்வியில் பெற்ற திறன்களைக் கொண்டு செயற்கை நுண்ணறிவு துறையில் தமது ஆற்றலை இவர் விரிவுபடுத்தவுள்ளார்.