‘தமிழ் தந்த வாழ்வு’ என்ற நூலின் அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 28) பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெறவுள்ளது.
இரண்டரை ஆண்டுகள் டெல்டா தொடக்கப்பள்ளி ஆசிரியராகவும் 33 ஆண்டுகள் பாய லேபார் மெத்தடிஸ்ட் பெண்கள் பள்ளி (தொடக்கநிலை) தமிழ்த் துறை ஒருங்கிணைப்பு ஆசிரியராகவும் பணியாற்றி ஓய்வுபெற்ற திருவாட்டி பரமேஸ்வரி ரெங்கநாதன் இந்நூலின் ஆசிரியர்.
“இந்நூலை எழுதும் ஆர்வம் எனக்கு முதலில் 2018ல் ஏற்பட்டது. என் தமிழாசிரியர் செ.பாலசுப்பிரமணியன் ஒரு நூலை எழுதி அறிமுகம் செய்திருந்தார். அப்போது அவருக்கு 80 வயது. அந்த வயதிலும் அவர் தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பாடுபட்டதைக் கண்டு எனக்கும் நூல் எழுத உந்துதல் ஏற்பட்டது,” என்றார் திருவாட்டி பரமேஸ்வரி.
உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றதும் மாணவர்களிடையே தமிழ்ப் புழக்கம் குறைவது தமக்குக் கவலையளிப்பதாகக் கூறிய அவர், அரசாங்கம் தமிழுக்காக நிறைய செய்தாலும், சிங்கப்பூர்த் தமிழ் மக்களும் “ஒன்றாகத் தேரை இழுத்தால்தான்” தமிழ் வாழும் மொழியாக நிலைக்கும் என்றார். அந்த அடிப்படையில்தான் நூலை தாம் எழுதியுள்ளதாகத் திருவாட்டி பரமேஸ்வரி சொன்னார்.
“சிங்கப்பூரில் தமிழுக்கு இன்று கிடைக்கும் அந்தஸ்து எளிதில் வரவில்லை. சிங்கப்பூர்த் தமிழர்கள் உயிரையே பணயம் வைத்து தமிழ்க்கல்வி வளர்ச்சிக்காக உழைத்தார்கள்; இன்றும் உழைக்கிறார்கள். இதை என் நூலில் வலியுறுத்துகிறேன்.
“அன்றைய சிங்கப்பூர்த் தமிழ்ப்பள்ளிகளின் வெற்றிகரமான தொடக்கமே இன்றைய தமிழ்க்கல்வி வளர்ச்சியின் அடையாளம். அப்பள்ளிகளை நடத்த நம் முன்னோர்கள் அனுபவித்த இன்னல்களை இன்று நினைத்துப் பார்ப்பதும் பதிவு செய்வதும் மிகவும் பொருத்தமான செயல் என்று எண்ணியதாலும் நான் இந்நூலை எழுதும் முயற்சியில் ஈடுபட்டேன்,” என்கிறார் திருவாட்டி பரமேஸ்வரி.
இந்நூலை எழுதி வெளியிட, அவருக்கு மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டன.
தன் கல்விப் பயணம், சிங்கப்பூரில் தமிழ்க் கல்வி, தானும் தன் சக தமிழாசிரியர்களும் மேற்கொண்ட தமிழ்ப் பணி, தமிழ்மொழி சிங்கப்பூரில் வாழும் மொழியாக நிலைக்க என்ன செய்யலாம் என வெவ்வேறு பாகங்களாக நூலை அவர் பிரித்துள்ளார்.
“1930களில் என் தந்தையும் 1950களில் என் தாயாரும் சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்தனர். அப்போது சிங்கப்பூரில் கொந்தளிப்பான காலம் நிலவியது. தமிழ்தான் அவர்களுக்குப் பேசத் தெரிந்த மொழி.
“என் பெற்றோர் தமிழில் எனக்கு எவ்வாறு ஆர்வமூட்டினார்கள் (என் தந்தை என்னை நூல்கள் படிக்கச் சொல்வதோடு சொற்பொழிவுகளுக்கும் அழைத்துச் சென்றார்), எவ்வாறு வீட்டில் தமிழ்ப் புழக்கம் இருந்தது எனப் பல சிந்தனையைத் தூண்டும் தகவல்களையும் என் நூலில் பகிர்கிறேன்,” என்றார் திருவாட்டி பரமேஸ்வரி.
தன் நூலைப் படித்துத் திருத்தியதற்குத் தன் தமிழாசிரியர் பாலசுப்பிரமணியன், தன் தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர் பேராசிரியர் சுப.திண்ணப்பன், முனைவர் மா.இராஜிக்கண்ணு மற்றும் தன் முழு நூல் எழுதும் பயணத்திற்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்த பேராசிரியர் வீரமணி ஆகியோருக்குத் திருவாட்டி பரமேஸ்வரி நன்றி கூறினார்.
நூல் அறிமுக விழாவிற்கு அனுமதி இலவசம். முன்பதிவு தேவையில்லை. ஆர்வமுள்ளோர் கலந்துகொள்ளலாம்.