உதம்பூர்: தன் வீட்டிலிருந்த நான்கு வயதுச் சிறுமியைச் சிறுத்தை ஒன்று கவ்விச் சென்று கொன்ற சம்பவம் இந்தியாவில் நிகழ்ந்தது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உதம்பூர் மாவட்டம், அப்பர் பஞ்சலா எனும் சிற்றூரில் சனிக்கிழமை இரவு 7-8 மணிக்குள் இச்சம்பவம் நிகழ்ந்தது.
தனு என்ற அக்குழந்தையின் உடல், அவ்வூரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கிடந்ததை உள்ளூர்வாசிகள் கண்டனர்.
“சிறுமியைச் சிறுத்தைக் கவ்விச் சென்றதாகத் தகவல் கிடைத்ததும் எம் குழுவினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். ஆயினும், குழந்தையின் உயிரற்ற உடலையே கண்டுபிடிக்க முடிந்தது,” என்று உதம்பூர் வனத்துறை அதிகாரி ராகேஷ் சர்மா கூறினார்.
அத்துடன், சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சி முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றும் மாண்ட குழந்தையின் குடும்பத்தினர்க்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், விடிகாலையிலும் அந்திப் பொழுதிலும் தனியே வெளியே செல்ல வேண்டாம் என்றும் சிறுத்தை போன்ற கொடிய விலங்குகள் பதுங்கியிருக்கும் அபாயமுள்ளது என்றும் பொதுமக்களுக்குத் திரு ராகேஷ் எச்சரித்துள்ளார்.