பெங்களூரு: தீவனம் வெட்டும் இயந்திரத்தில் சிக்கித் துண்டான பெண் ஒருவரின் நான்கு விரல்கள், 12 மணிநேர அறுவை சிகிச்சைக்குப்பின் கையுடன் பொருத்தப்பட்டன.
இந்தியாவின் கர்நாடக மாநிலம், கோலாரைச் சேர்ந்தவர் மஞ்சுளா, 44. விவசாயியான இவர் இம்மாதம் 1ஆம் தேதி மாடு மேய்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது, தீவனம் வெட்டும் இயந்திரத்தில் அவரது இடக்கை சிக்கியது. அதில், சிறுவிரல் தவிர்த்து மற்ற நான்கு விரல்களும் துண்டாயின.
உடனடியாக அவர், துண்டான விரல்களுடன் கோலார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டபின் அவர் பெங்களூரில் உள்ள ஹோஸ்மட் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு, துண்டான கைவிரல்கள் முதலில் நுண்ணோக்கி மூலம் பரிசோதிக்கப்பட்டன. பின்னர் அவை அறுவை சிகிச்சைமூலம் மஞ்சுளாவிடன் இடக்கையில் மீண்டும் பொருத்தப்பட்டன.
மருத்துவர் கண்ணன் கருப்பையா குமார், மருத்துவர் தீபு இருவரும் இணைந்து 12 மணி நேரம் அந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமையன்று மருத்துவமனையிலிருந்து மஞ்சுளா வீடு திரும்பினார். இன்னும் 2-3 மாதங்களில் அவர் தமது வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்படி, துண்டான நான்கு விரல்கள் மீண்டும் பொருத்தப்பட்டிருப்பது அரிதினும் அரிதான நிகழ்வு என்று ஹோஸ்மட் மருத்துவமனையின் தலைமை எலும்பு மருத்துவர் தாமஸ் சண்டி குறிப்பிட்டார்.
விரைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாலும் துண்டான விரல்களைப் பாதுகாப்பாகக் கொண்டுவந்ததாலும் இது சாத்தியமானது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
துண்டான விரல்களை ஒரு நெகிழிப் பையில் போட்டு, அப்பையைப் பனிக்கட்டிகளுக்குள் போட்டு எடுத்துவர வேண்டும் என்றும் துண்டான விரல்களை குளிர்நீரில் போடக்கூடாது என்றும் மருத்துவர் தீபு கூறினார்.