பெருவிரைவு ரயில் கதவுக்கும் ரயில் சுவருக்கும் இடையே சிக்கிய ஒரு மாதின் மோதிர, சுண்டு விரல் எலும்புகள் முறிந்தன.
இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை மாலை நிகழ்ந்தது என ஷின்மின் நாளிதழ் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
“நான் ரயில் கதவுகளுக்கு அருகில் நின்றுகொண்டிருந்தேன். ரயில், லெவண்டர் ரயில் நிலையம் அருகே வந்தபோது நான் சமநிலை தவறாமல் இருக்க என்னுடைய இடதுகையை ரயில் கதவின்மீது வைத்திருந்தேன்,” என 48 வயதான திருவாட்டி இங் சீனமொழி நாளிதழிடம் தெரிவித்தார்.
“எதிர்பாராத விதமாக கதவு திடீரெனத் திறந்தது. என்னுடைய இடதுகை விரல்கள் ரயிலின் கதவுக்கும் ரயில் சுவருக்கும் இடையே மாட்டிக்கொண்டது. நான் வலியால் துடித்தேன்,” என்று அவர் கூறினார்.
அதிர்ஷ்டவசமாக, சில பயணிகள் அங்கு என்ன நடந்தது என்று பார்த்தனர் என்றும் திறந்திருக்கும் ரயிலின் கதவை எதிர்திசையில் தள்ள அவர்கள் உதவினர் என்றும் திருவாட்டி இங் சொன்னார்.
“சிலர் என் கையைப் பிடித்துக்கொண்டனர். மற்றவர்கள் அவசரப் பொத்தானை அழுத்த, ரயில் நின்றது. பெருவிரைவு ரயில் ஊழியர்கள் வந்து சிலர் அடிப்படை சிகிச்சை வழங்குவதற்காக என்னை அவர்களது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்,” என்று அவர் விளக்கினார்.
தம்மைக் காப்பாற்ற உதவிய அனைவருக்கும் திருவாட்டி இங் நன்றி தெரிவித்துக்கொண்டார்.