கொச்சி: ஏழாம் வகுப்பு படித்திருந்தால் போதும்! மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
இவையே, ஏவலாள் (பியூன்) பணிக்கு இந்தியாவின் கேரள மாநில அரசாங்கம் குறிப்பிட்டுள்ள தகுதிகள்.
இந்நிலையில், அக்டோபர் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலையில் எர்ணாகுளம் நகரில் ஏராளமான பொறியாளர்களும் பட்டதாரிகளும் அப்பணிக்கு விண்ணப்பிக்க வரிசைகட்டி நின்றதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி தெரிவிக்கிறது.
அவர்களில் 101 பேர் மிதிவண்டி ஓட்டும் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
கேரளத்தில் ஏவலாள் பணிக்கு மாதம் கிட்டத்தட்ட ரூ.23,000 ஊதியம் வழங்கப்படுகிறது. அத்துடன், காலையில் பணிக்குச் சென்றால் மாலையில் வீடு திரும்பிவிடலாம். இதனால், அப்பணியைப் ‘பாதுகாப்பான வேலை’ என்று விண்ணப்பிக்க வந்திருந்த பட்டதாரிகள் பலரும் குறிப்பிட்டனர்.
“கேரள மின்வாரியம் போன்ற நிறுவனங்களில் ஏவலாள் வேலைக்குச் சேர்ந்தால் 30,000 ரூபாய்க்குமேல் சம்பளம் கிடைக்கும்,” என்றார் வங்கியியலில் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ள கே பிரசாந்த்.
“அலுவலக உதவியாளர்கள், தங்கள் வேலை தொடர்பில் மிதிவண்டியைப் பயன்படுத்தி வந்தனர். இப்போது, பயண முறை மாறிவிட்டாலும் விதிமுறை இன்னும் மாற்றப்படவில்லை. கடைநிலை ஊழியர்களுக்கு மிதிவண்டித் தேர்வு கட்டாயமாக இருந்தது. ஆயினும், கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குமுன் அது நிறுத்தப்பட்டுவிட்டது. இப்போது அலுவலக உதவியாளர்களுக்கு மட்டும் அது கட்டாயமாக உள்ளது,” என்று மாநிலத் தேர்வாணைய அதிகாரி ஒருவர் விளக்கினார்.
இப்போதைய சூழலில் நல்ல சம்பளத்துடன் பாதுகாப்பான வேலை கிடைப்பதென்பது குதிரைக் கொம்பாகிவிட்டது என்றார் மிதிவண்டித் தேர்வுக்கு வந்திருந்த பி.டெக். பட்டதாரி விவேக்.
இந்தியாவிலேயே கேரளத்தில்தான் ஆக அதிகமாக 510,00 பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ளனர் என்று மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சுத் தரவுகள் குறிப்பிடுகின்றன.