கோல்கத்தா: போலியான ஆவணங்களின் அடிப்படையில் கடப்பிதழ்கள் வழங்குவதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, இந்தியாவின் மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அதிகாரிகள் மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் 50 இடங்களில் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, 24 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சிக்கிம் மாநிலத் தலைநகர் கேங்டாக்கில் பணியாற்றிவந்த அதிகாரி ஒருவரும் இடைத்தரகர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் சிபிஐ தெரிவித்தது.
போலியான ஆவணங்களின் அடிப்படையில் வெளிநாட்டவர் உட்பட தகுதியில்லாதவர்களுக்குக் கடப்பிதழ் வழங்கப்படுவதாக சிபிஐக்குத் தகவல் கிடைத்தது.
அதனையடுத்து, கோல்கத்தா, சிலிகுரி, கேங்டாக் உள்ளிட்ட பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.
அவற்றின் தொடர்பில் 16 அதிகாரிகள் உட்பட 24 பேர்மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.
முன்னதாக, இருபது ஆண்டுகளுக்குமுன் போலிக் கடப்பிதழ்கள் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவரை டெல்லி நீதிமன்றம் விடுவித்தது.
அவர்களிடமிருந்து ஆறு போலிக் கடப்பிதழ்களும், மூன்று விசா ஒட்டுவில்லைகளும், சவூதி அரேபியத் தூதரகத்தின் ஐந்து முத்திரைகளும் கடந்த 2002ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி பறிமுதல் செய்யப்பட்டதாக அரசாங்கத் தரப்பு தெரிவித்தது.