சண்டிகர்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்திற்குச் சென்றபோது பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதற்காக காவல்துறை அதிகாரிகள் எழுவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுள் ஃபெரோஸ்பூர் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரும் (எஸ்பி) இரண்டு துணைக் கண்காணிப்பாளர்களும் (டிஎஸ்பி) அடங்குவர்.
பஞ்சாப் மாநிலச் சட்டமன்றத் தேர்தலையொட்டி இடம்பெற்ற பேரணியில் கலந்துகொள்வதற்காக 2022 ஜனவரி 5ஆம் தேதி பிரதமர் மோடி பஞ்சாப் சென்றார். அப்போது, விவசாயிகள் போராட்டம் காரணமாக பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள் மேம்பாலம் ஒன்றில் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் நிற்க வேண்டியதாயிற்று.
இந்தப் பாதுகாப்புக் குறைபாட்டிற்காக அப்போதைய பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான அரசாங்கத்தைப் பாஜக குறைகூறியது. ஆனால், மோடியின் பயணத் திட்டங்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டதாக மாநில அரசாங்கம் தெரிவித்தது.
இதனையடுத்து, அந்தப் பாதுகாப்பு விதிமீறல் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது. இந்நிலையில், அந்தப் பாதுகாப்பு விதிமீறலுக்கு மாநிலக் காவல்துறை அதிகாரிகளே பொறுப்பு என்று அக்குழு தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பஞ்சாப்பை இப்போது ஆளும் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசாங்கம் ஏழு காவல்துறை அதிகாரிகளைப் பணியிடைநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.