புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனால், ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்ரல் 21) நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணியின் பெரும்பேரணியில் அவர் கலந்துகொள்ள மாட்டார் என்று காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அவருக்குப் பதிலாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இண்டியா கூட்டணியின் இந்தப் பேரணியில் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான், ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுபோல், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் துணைவியார் சுனிதா, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் துணைவியார் கல்பனா ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்வர் எனத் தெரிவிக்கப்பட்டது.
கெஜ்ரிவால், சோரன் இருவரும் அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பேரணியில் அவ்விவகாரம் முக்கியத்துவம் பெறும் எனச் சொல்லப்படுகிறது.