ஆந்திரப் பிரதேசம், அன்னமய்யா மாவட்டத்தில் தக்காளி விற்பனையில் கிடைத்த பணத்தைக் கொள்ளையடிப்பதற்காக அடையாளம் தெரியாதவர்களால் தக்காளி விவசாயி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சித்தூர் மாவட்டம், மதனப்பள்ளி அருகே உள்ள போடிமல்லாடினா கிராமத்தை சேர்ந்த 62 வயது விவசாயி ராஜசேகர் 5 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார்.
கடந்த 20 நாட்களில் மட்டும் அவர் 30 லட்சம் ரூபாய் அளவுக்கு தக்காளி விற்பனை செய்துள்ளார்.
இந்நிலையில், செவ்வாய் இரவு விவசாயி ராஜசேகர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வாயில் துணி வைத்து அடைத்து, கை, கால்கள் கட்டப்பட்டு, தலை சிதைக்கப்பட்ட நிலையில், மதனப்பள்ளி புறநகர் பகுதியில், சாலையோரம் விவசாயி ராஜசேகரின் உடல் கண்டெடுப்பட்டது.
உடலைக் கைப்பற்றிய ஆந்திர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 30 லட்சம் ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்ததற்கான ரசீது சம்பவ இடத்தில் கிடந்தது காவல்துறையினரிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தக்காளிக்கான பணத்தை வாங்கி வந்தபோது யாரேனும் பின்தொடர்ந்து சென்று கொலை செய்தனரா அல்லது, விவசாயி ராஜசேகருக்கு பணம் கொடுக்க வேண்டிய மொத்த வியாபாரிகளின் சதிச்செயலா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தக்காளி வாங்குவதாக கூறி அடையாளம் தெரியாத சிலர் பண்ணைக்கு வந்ததாக அவரது மனைவி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். கணவன் ஊருக்குச் சென்றுவிட்டதாகக் கூறியதையடுத்து அவ்விடத்தை விட்டுச் சென்றனர்.
மூன்று அல்லது நான்கு பேர் இந்த கொலையை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
இந்தியாவில் தக்காளி விலை உயர்ந்துள்ளநிலை தக்காளி தொடர்பான திருட்டுகளும் கொள்ளைகளும் அதிகரித்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.