ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள திக்வார் துணைப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இரண்டு முதல் மூன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாகத் தகவல் கிடைத்ததன்பேரில் திங்கட்கிழமை அதிகாலை பாதுகாப்புப் படையினரும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இருளில் மறைந்திருந்து தீவிரவாதிகளின் நடமாட்டத்தை அவர்கள் கண்காணித்து வந்தனர்.
அப்போது, பாதுகாப்புப் படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினா்.
இரு பிரிவினருக்கும் இடையே தொடா்ந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மற்றொருவர் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு ஓட முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதக் குழுக்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.