புதுடெல்லி: இந்தியாவில் ஆளில்லா வானூர்திகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் சீனாவில் தயாரிக்கப்படும் உதிரிபாகங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று இந்திய அரசாங்கம் அண்மைய மாதங்களில் தடை விதித்தது.
பாதுகாப்புக்கு மிரட்டல் ஏற்படலாம் என்பதே இதற்கான காரணம் என்பது தெரியவந்துள்ளது.
ஆவணங்கள் மூலமாகவும் தற்காப்பு, தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்த விவரங்கள் மூலமாகவும் இந்த நிலவரம் தெரியவருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவும் சீனாவும் அணு ஆயுதங்களைக் கொண்ட அண்டை நாடுகள். அவை இரண்டுக்கும் இடையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்தியா தனது ராணுவத்தை நவீனமயமாக்கி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஆளில்லா வானூர்திகளை அதிகம் பயன்படுத்த புதுடெல்லி திட்டம் போடுகிறது. இதர தானியக்க நவீனங்கள் பற்றியும் அது யோசித்து வருகிறது.
இந்த நிலையில் இந்தத் தடை இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிநவீன ஆளில்லா வானூர்தி தொழில்துறை இந்தியாவிற்குப் புதிது. அது ராணுவத்தின் தேவைகளை நிறை வேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சூழ்நிலை இப்படி இருப்பதால் இந்தியாவின் பாதுகாப்புத் துறை தலைவர்களிடையே ஒருவகை கவலை நிலவி வருவதாக தற்காப்புத் துறையினரும் இந்தத் தொழில்துறையினரும் கூறுகிறார்கள்.
அதாவது, ஆளில்லா வானூர்திகளில் சீனாவில் தயாரிக்கப்படும் உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பட்சத்தில், தகவல்களைப் பகிர்வது, படச்சாதனங்கள், வானொலி ஒலிபரப்புகள், நடைமுறை மென்பொருள்கள் ஆகியவை மூலம் வேவுத் தகவல்களைப் பகிரும்போது அவை வெளியே கசிந்துவிடக்கூடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
ராய்ட்டர்ஸ் நிறுவனம், இதன் தொடர்பில் தற்காப்பு, தொழில்துறையைச் சேர்ந்த மூன்று பேரையும் அரசாங்கம், இதர துறைகளைச் சேர்ந்த ஆறு பேரையும் அணுகி தகவல்களைத் திரட்டியது.
அவர்கள், தங்களுடைய பெயர் முதலான விவரங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இந்தியாவின் தற்காப்பு அமைச்சும் பதில் கூற மறுத்துவிட்டதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.
இந்தியா, கடந்த 2020ஆம் ஆண்டு முதலே ஆளில்லா வானூர்தி தொடர்பில் கட்டம் கட்டதாக பல கட்டுப்பாடுகளை விதித்து வந்துள்ளது.
அதனை ஒட்டி இப்போது சீன உதிரிபாகங்களுக்குத் தடையும் விதிக்கப்பட்டு இருக்கிறது. இது, ராணுவ ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் நடைமுறைப்படுத்தப்படுவதாக ஆணவங்கள் மூலம் தெரிய வருகிறது.
இந்திய ராணுவ அதிகாரிகள், ஆளில்லா வானூர்திகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் தொடர்பில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இரண்டு கூட்டங்களை நடத்தினர்.
இந்தியாவுடன் நிலப்பகுதி எல்லையைக் கொண்ட நாடுகளிடம் இருந்து பெறப்படும் சாதனங்களையோ உதிரிபாகங்களையோ பயன்படுத்தும் நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளிகளைப் பெற இயலாது என்று அத்தகைய நிறுவனங்களிடம் அதிகாரிகள் அந்தக் கூட்டங்களின்போது தெரிவித்தனர்.
சீனாவில் தயாரிக்கப்படும் வானூர்திகளையும் உதிரிபாகங்களையும் வாங்கவோ பயன்படுத்தவோ கூடாது என்று அமெரிக்காவின் நாடாளுமன்றம் அந்த நாட்டின் தற்காப்பு அமைச்சுக்கு 2019ல் தடை விதித்தது.