சென்னை: தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை மத்திய அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின்கீழ ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. ஆனால், மாரடைப்பு ஏற்பட்டதாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
அதன் பின்னர் நீதிமன்றக் காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து அமலாக்கத் துறை விசாரிக்க உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை அனுமதி வழங்கியது.
ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை திங்கட்கிழமை மாலை புழல் சிறை அதிகாரிகளிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் சமர்ப்பித்தனர். அதனைத் தொடர்ந்து இரவு 8.30 மணியளவில் செந்தில் பாலாஜி சிறையிலிருந்து அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அப்போது அவர் சிறிய தாடியுடன் காணப்பட்டார்.
உடனடியாக அவரிடம் விசாரணை தொடங்கியது. செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரித்தனர். ஜூலை 12ஆம் தேதி வரை அவர் அமலாக்கத் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பார். கைது செய்யப்பட்டு 55 நாள்களுக்குப் பிறகு செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை விசாரணையைத் தொடங்கி உள்ளது.