பெங்களூரு: கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்துக்கு விநாடிக்கு 22 ஆயிரம் கனஅடி நீரை திறந்துவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 37.9 டிஎம்சி நிலுவை நீரை வழங்குமாறு காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது.
இதனிடையே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கர்நாடகாவுக்கு எதிராக வழக்கு தொடுத்தது. இதையடுத்து கர்நாடக அரசு தமிழகத்துக்கு 10 டிஎம்சி நீரை திறந்துவிட உத்தரவிட்டது.
இதற்கு கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசியல்வாதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் அரசு கர்நாடக விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. தமிழகத்துக்கு திறந்துவிட்டிருக்கும் நீரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறிவருகின்றனர்.
கர்நாடக அரசு நீரை திறக்காவிடில் இண்டியா கூட்டணியில் குழப்பம் வரும். அதைத் தவிர்க்கத்தான் காங்கிரஸ் அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என அவர்கள் கண்டித்துள்ளார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை, கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்து தமிழகத்துக்கு, மொத்தமாக விநாடிக்கு 22 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் மேகதாது அருகே காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு நீர் திறக்கப்பட்டதை கண்டித்து கர்நாடக விவசாய அமைப்பினர் வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கப்பட்ணா அருகே காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக அணைகளில் போதிய நீர் இல்லாத நிலையில் தமிழகத்துக்கு நீரை திறக்கக்கூடாது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசு கர்நாடக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக குற்றம்சாட்டினர். பின்னர் காவல்துறை அதிகாரிகள் விவசாயிகளை ஆற்றில் இருந்து வெளியேற்றி கைது செய்தனர்.