புதுடெல்லி: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட ஒன்பது பேர் மாநிலங்களவை எம்.பி.க்களாக செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் உள்ளிட்டோரின் பதவிக்காலம் முடிவடைந்தது.
இதற்கான தேர்தல் அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் வெளியானது. இந்நிலையில் இவர்கள் மீண்டும் எம்.பி.க்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து நேற்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், பாஜக எம்.பி.க்கள் நாகேந்திர ராய், கேசரிதேவ்சிங் திக்விஜய் சிங் ஜாலா, பாபுபாய் ஜேசங்பாய் தேசாய், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் டெரிக் ஓ பிரையன், டோலா சென், சுகேந்து சேகர் ராய், பிரகாஷ் சிக் பராய்க், சமிருல் இஸ்லாம் ஆகியோர் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு பதவியேற்றுக் கொண்டனர்.
அவர்களுக்கு குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தங்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்கு 2வது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘மாநிலங்களவை எம்.பி.யாக நான் பதவியேற்பதில் பெருமையடைகிறேன். நாட்டு மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய வாய்ப்பளித்த குஜராத் மக்கள், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவுக்கு நன்றி,’’ எனக் கூறியுள்ளார்.