புதுடெல்லி: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் முதல்கட்டப் பரிசோதனைத் திட்டத்தை இஸ்ரோ அக்டோபர் மாதம் தொடங்குகிறது.
சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 ஆகியவற்றின் வெற்றியைத் தொடர்ந்து இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
சந்திரயான்-3 திட்டத்தை வெற்றிகரமாக முடித்த இஸ்ரோ, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா -எல்1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ளது.
மூன்றாவது சாதனை முயற்சியாக, விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தைச் செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக உள்ளது. அதன்படி முதல் பரிசோதனை திட்டத்தை இஸ்ரோ மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
ககன்யான் திட்டத்தின் தொடக்கமாக இரண்டு ராக்கெட்டுகளில் ஆளில்லா விண்கலம் அனுப்பிப் பரிசோதிக்கப்படும்.
அடுத்ததாக, பூமியிலிருந்து 300 முதல் 400 கி.மீ தூரத்தில் உள்ள புவியின் கீழடுக்குச் சுற்றுவட்டப் பாதையில் விண்வெளி வீரர்கள் சில நாள்கள் சுற்றிவிட்டு திரும்பும் வகையில் விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
ககன்யான் திட்டத்துக்கான பலகட்டப் பரிசோதனைகள் ஏற்கெனவே முடிக்கப்பட்டுள்ளன.