பெங்களூரு: சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்வெளியில் பாய்ச்சப்பட்டிருக்கும் ‘ஆதித்யா-எல்1’ விண்கலத்தின் சுற்றுப்பாதை 3வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
சூரியனின் வெளிப்புற பகுதியை ஆராயவிருக்கும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) ‘ஆதித்யா-எல்1’ எனும் நவீன விண்கலம், இம்மாதம் 2ஆம் தேதி ‘பிஎஸ்எல்வி-சி57’ ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
குறைந்தபட்சம் 235 கி.மீ, அதிகபட்சம் 19,500 கி.மீ. தூரம் கொண்ட புவி நீள்வட்ட சுற்றுப் பாதையில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப்பாதையின் உயரத்தை அதிகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது 3வது முறையாக ஆதித்யா விண்கலத்தின் சுற்றுப் பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆதித்யா விண்கலம் பூமிக்கு அருகே வரும்போது, அதில் உள்ள இயந்திரங்கள் இயக்கப்பட்டு சுற்றுப்பாதை உயரம் படிப்படியாக அதிகரிக்கப்படுகிறது. அதன்படி, விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை இரண்டு முறை மாற்றப்பட்டது. இம்மாதம் 9ஆம் தேதி 3வது முறையாக அதன் சுற்றுப் பாதை உயர்த்தப்பட்டது என்று இஸ்ரோ தெரிவித்தது.
இதன்மூலம், குறைந்தபட்சம் 296 கி.மீ. அதிகபட்சம் 71,767 கி.மீ. தூரம் கொண்ட சுற்றுப் பாதைக்கு விண்கலம் கொண்டு செல்லப்பட்டது. இதுபோல இன்னும் இரண்டு முறை சுற்றுப் பாதை உயரம் அதிகரிக்கப்படும். பின்னர், ஆதித்யாவின் பயணம் இம்மாதம் 15ஆம் தேதி மாற்றி அமைக்கப்படும்.
அதன் பின்னர் புவிவட்டப் பாதையில் இருந்து விலகி, சூரியனை நோக்கி விண்கலம் பயணிக்கும் என்று இஸ்ரோ மேலும் தெரிவித்துள்ளது.