புதுடெல்லி: ஜி20 உச்சநிலை மாநாட்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு செலவு அதிகரித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
மாநாடு முடிவுற்றதால் பிரதமர் மோடி இனியாவது நாட்டின் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒதுக்கப்பட்டது வெறும் 990 கோடி ரூபாய். ஆனால், பாஜக அரசு அந்த மாநாட்டுக்காக ரூ.4,100 கோடி செலவிட்டுள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சாடியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் உலக நாடுகளின் அரசுகள் பொது நிகழ்வுகளுக்கான செலவினங்களைக் குறைத்து வருகிறது.
இந்தோனீசியா இதே ஜி20 மாநாட்டை நடத்த இந்தியா செலவுசெய்ததில் வெறும் 10 விழுக்காடுதான் செலவழித்தது. பாலி உச்சநிலை மாநாட்டுக்கு இந்தோனீசியா செலவிட்ட தொகை, இந்திய மதிப்பில் ரூ.364 கோடிதான் என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அரசாங்கத்தால் உள்நாட்டில் சலுகை விலையில் எரிபொருள் தர இயலவில்லை; விவசாயிகளுக்கு பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையைத் தர முடியவில்லை. ஆனால், மாநாட்டுக்கு இவ்வளவு தொகை செலவழிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
ஜி20 மாநாட்டுக்காக செலவழிக்கப்பட்ட ரூ.4100 கோடியில் புதுடெல்லி மாநகராட்சிக்கு ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
டெல்லி வளர்ச்சிக் குழுமத்துக்கு ரூ.18 கோடி, சாலைப் போக்குவரத்து அமைச்சுக்கு ரூ.26 கோடி, பொதுப்பணித் துறைக்கு ரூ.45 கோடி, டெல்லி மாநகராட்சிக்கு ரூ.5 கோடி, வெளியுறவு அமைச்சுக்கு ரூ.0.75 கோடி, வனத்துறைக்கு ரூ.16 கோடி, டெல்லி காவல்துறைக்கு ரூ.340 கோடி, இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்புக்கு ரூ.3,600 கோடி ஒதுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செலவுகள் குறித்த தகவல்களால் இப்போது இந்தியாவில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.