முக்த்சார்: பஞ்சாப் மாநிலம் முக்த்சார் மாவட்டத்தில் உள்ள சிர்ஹிந்த் ஃபீடர் கால்வாயில் சுமார் 35 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் எட்டுப் பயணிகள் உயிரிழந்தனர்.
அந்த விபத்து கோட்காபுரா என்ற சாலையில் ஜபேல்வாலி என்ற கிராமம் அருகில் நிகழ்ந்தது. பேருந்தை நிறுத்த முயன்றபோது பேருந்து சறுக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை விபத்தில் சிக்கியோரை மீட்டது.
“கால்வாயின் வலுவான நீரோட்டத்தால் சில பயணிகள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
“அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடக்கின்றன. கால்வாயில் விழுந்த பேருந்து பாரந்தூக்கி உதவியுடன் வெளியே கொண்டு வரப்பட்டது.
“காயம் அடைந்த பயணிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்,” என்று முக்த்சார் துணை ஆணையர் ரூஹீ டக் கூறினார்.