உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் முறையை இந்தியா மேம்படுத்தினால், 4.6 மில்லியன் மரணங்களைத் தவிர்க்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமையன்று நடந்த ஐக்கிய நாட்டுப் பொதுச் சபையின் 78வது அமர்வின்போது அனைத்துலக அளவில் அழிவுகரமாக அமையக்கூடிய உயர் ரத்த அழுத்தத்தின் தாக்கம் குறித்து உலக சுகாதார நிறுவனம் முதன்முதலாக அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்தியாவில் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினையுடன் 30 வயதுக்கும் 79 வயதுக்கும் இடைப்பட்ட சுமார் 188.3 மில்லியன் பேர் இருப்பதாக அறிக்கை கூறியது. 50% கட்டுப்பாட்டு விகிதத்தை அடைவதற்காக உயர் ரத்த அழுத்தமுள்ள மேலும் 67 மில்லியன் பேருக்குப் பலனளிக்கும் வகையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
உயர் ரத்த அழுத்தம் என்று மருத்துவரால் உறுதிசெய்யப்பட்டவர்கள் 37 விழுக்காட்டினர். இதில் 32 விழுக்காட்டினர் ஆண்கள், 42 விழுக்காட்டினர் பெண்கள். சிகிச்சைக்குச் செல்லும் 35 விழுக்காட்டினரில் 35 விழுக்காட்டினர் பெண்கள், 25 விழுக்காட்டினர் ஆண்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
தற்போது 15 விழுக்காட்டினர் மட்டுமே தங்களின் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக அறிக்கை குறிப்பிட்டது. இப்பிரிவினரில் 19 விழுக்காட்டினர் பெண்கள், 11 விழுக்காட்டினர் ஆண்கள் ஆவர்.
உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தாத நிலையில் ஒருவருக்கு மாரடைப்பு, பக்கவாதம், அகால மரணம் போன்றவை நேரலாம். மாரடைப்பு போன்ற இதய நோய்கள் தொடர்பாக இந்தியாவில் பதிவான மரணங்களில் 52%, உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்பட்டவை என்றும் அறிக்கை சுட்டியது.
அனைத்துலக அளவில் மூன்று பேரில் ஒருவர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார். அத்துடன் ஐந்தில் நால்வர் தங்களின் உயர் ரத்த அழுத்தத்திற்குப் போதிய சிகிச்சை பெறுவதில்லை. இருப்பினும் நாடுகள் தங்களின் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டால் 2023க்கும் 2050க்கும் இடைப்பட்ட காலத்தில் 76 மில்லியன் மரணங்களைத் தவிர்க்கலாம் என்றது அறிக்கை.