பெங்களூரு: கர்நாடக நீர் பாதுகாப்பு குழு தலைவர் குருபூர் சாந்தகுமார், ‘‘தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்து செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல்மாலை 6 மணி வரை பெங்களூருவில் முழு அடைப்பு நடைபெறும்,’‘ என அறிவித்தார்.
இந்த போராட்டத்துக்கு கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பு உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட சிறுசிறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.
இருப்பினும் கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ், தனியார் வாகன உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தன்வீர் உள்ளிட்டோர் இதற்கு ஆதரவு அளிக்க மறுத்துவிட்டனர்.
போராட்டம் காரணமாக பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் அன்று நடைபெறவிருந்த காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
செவ்வாய்க்கிழமை சில கடைகளும், வணிக வளாகங்களும், திரையங்கங்களும் மூடப்பட்டன. சில தனியார் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவை தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தவாறு பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டன.
அதேவேளையில் தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், உணவகங்கள் அரசு அலுவலகங்கள் ஆகியவை வழக்கம்போல இயங்கின. பொதுப் போக்குவரத்துகளும் வழக்கம்போல இயங்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் இருந்து பெங்களூருவுக்குச் சென்ற ஏராளமான பேருந்துகள் அத்திப்பள்ளி சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கி விடப்பட்டனர். இதனால் பயணிகள் சுமைகளைத் தூக்கிக்கொண்டு கர்நாடக எல்லைக்கு நடந்து செல்ல வேண்டியிருந்தது.